தினமலர் 22.02.2010
குடிநீர் குழாய் அடிக்கடி பழுது: பேரூராட்சி தலைவர் புகார் : நடவடிக்கை எடுக்க கலெக்டர் உறுதி
கிணத்துக்கடவு : குடிநீர் திட்ட குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் நெகமம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக இப்பேரூராட்சியினர் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, நடவடிக்கை எடுக்க கோவை கலெக்டருக்கும் மனு அளித்துள்ளனர்.
நெகமம் பேரூராட்சி தலைவர் சபரிகார்த்திகேயன் தலைமையில் கவுன்சிலர்கள் கோவை கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு : நெகமம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரிய நெகமம், காளியப்பம்பாளையம், சின்னேரிபாளையம், ரங்கம்புதூர் போன்ற கிராமங்களும் சேர்ந்துள்ளது. சூளேஸ்வரன் பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வடிகால் வாரியம் தினமும் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கி வந்தது.
இந்த தண்ணீரை 30 பிரிவுகளாக பிரித்து வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டது. சில மாதங்களாக பொள்ளாச்சியில் இருந்து நெகமம் செல்லும் ரோடு அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் செய்தனர். அப்போது, நெடுஞ்சாலைத்துறையினர் குழிதோண்டும் போது, பல இடங்களில் குடிநீர் குழாய் மெயின் பைப்களில் உடைப்பு ஏற்பட்டது. நெகமம் பேரூராட்சிக்கு தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் போர்வெல்லை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து வருகின்றனர்.தற்போது, கோடை காலம் துவங்கியதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நெகமம் பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை பெற்ற கலெக்டர், உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, மூன்று லட்சம் செலவில் புதிய போர்வெல்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார். சூளேஸ்வரன்பட்டி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைக்க வரைவு திட்டம் தயார் செய்ய பட்டு உடனடியாக நிறைவேற்ற உறுதியளித் திருப்பதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.