தினமணி 22.02.2010
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட முதல் கட்டப் பணிகள் தொடக்கம்
தருமபுரி, பிப். 21: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 5 கட்டப் பணிகளில் தற்போது முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி பென்னாகரம் அருகேயுள்ள மடம் பகுதியில் தரைமட்ட நீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 6,755 குடியிருப்புகளைச் சேர்ந்த 31.43 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,928.80 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் முதல் கட்டப் பணிகள் கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி காவிரி ஆற்றுப் படுகையில் 160 மில்லியன் லிட்டர் நீர் உறிஞ்சும் வகையில் கிணறு மற்றும் மோட்டார்கள் அமைக்கும் வகையில் கான்கிரீட் தளங்கள் அமைப்பதற்காக காவிரி ஆற்று நீரின் ஒரு பகுதியை மாற்றுதிசைக்கு திருப்பும் பணி நடந்துவருகிறது. மேலும் மடம் பகுதியில் 240 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டும் பணியும் நடந்துவருகிறது.