தினமலர் 25.02.2010
சேலம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நேற்று சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான லோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் உள்ளிட்ட நகராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் எந்தெந்த பகுதியில் சீராக உள்ளது, எந்த பகுதியில் பிரச்னைகள் உள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கலெக்டர் சந்திரகுமார் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் 13 ஒன்றிய பகுதிகளுக்கு வழங்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தில் மோட்டார்களை 24 மணி நேரமும் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனடியாக எடுத்து நான்கு அல்லது ஐந்து நாட்களில் 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கூடுதல் குடிநீர் பம்ப் செய்யப்படுவதால், கிராமப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க முடியும். சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் லாரிகள் மற்றும் டிராக்டர் மூலம் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனுமதியின்றி போடப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டாலோ, மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினாலோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தற்போதுள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க வேண்டும்.