தினமணி 17.07.2009
குடியாத்தம் நகராட்சியில் 22 மின் மோட்டார்கள் பறிமுதல்
குடியாத்தம், ஜூலை 16: குடியாத்தம் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கும் குழாயில் நேரிடையாக தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 22 மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் நகரில் தற்போது குடிநீர்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கும் குழாய்களில் சில வீடுகளில் நேரிடையாக மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன், பொறியாளர் யு. சரவணன், குழாய் ஆய்வாளர் சேகர், பணி மேற்பார்வையாளர் சங்கர் உள்ளிட்டோர் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குழாயில் குடிநீர் உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட 22 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.