Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் குடிநீர் திட்டத்துக்கு நிலம் தர அங்கீகாரம்

Print PDF

தினமலர் 09.03.2010

பில்லூர் குடிநீர் திட்டத்துக்கு நிலம் தர அங்கீகாரம்

காரமடை : பில்லூர் 2ம் குடிநீர் திட்டத்திற்காக 1.85 ஹெக்டேர் நிலத்தை கோவை மாவட்ட வனத்துறை, கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அங்கீகாரம் வழங்கியது.கோவை மாநகராட்சி சார்பில் பில்லூர் 2ம் குடிநீர் திட்டத்தில் நீர் சுத்தீகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் நடந்து வருகிறது. நீர் உறிஞ்சும் கிணறு பில்லூர் டேம் நீர் தேக்கத்தில் கெம்மாரம்பாளையம் ஊராட்சி நெல்லிமரத்தூர் மலைகிராமத்தில் 1.85 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது.

வனத்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தில், 11 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை கையகப்படுத்தி, கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்க சிறப்பு கிராம சபா கூட்டம் கெம்மாரம்பாளையம் ஊராட்சி தலைவர் வெள்ளிங்கிரி தலைமையில் நெல்லிமரத்தூரில் நடந்தது. கூட்டத்தில் நெல்லிமரத்தூர் ஒதுக்கக்காடுகள் பகுதியில் 1.85ஹெக்டேர் நிலத்தை கோவை வனத்துறை, கோவை மாநகராட்சிக்கு பரிவர்த்தனை அடிப்படையில் உரிமை மாற்றம் செய்ய அங்கீகரிக்கப்பட்டது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து வந்த 11 பேருக்கு கல்வி அடிப்படையில், கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன், கோவை மாநகராட்சி அலுவலர்கள், வனத்துறை, மின்சார வாரிய அதிகாரிகள், கெம்மாரம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் செல்வன், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 09 March 2010 06:41