தினமலர் 11.03.2010
வந்தவாசி நகராட்சி பகுதிக்கு ரூ. 8 கோடியில் குடிநீர் திட்டம்
வந்தவாசி : வந்தவாசி நகராட்சி பகுதிக்கு, குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை நகராட்சி உறுப்பினர்களுக்கு விளக்குவதற்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி வளாகத் தில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சீனுவாசன் தலைமை வகித்தார். கமிஷனர் சசிகலா முன்னிலை வகித்தார்.
இதில் எஸ்பிடி., கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் சென்பகநாதன், இணை இயக்குனர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து விளக்கினர். இதில் அவர்கள் குறிப்பிட்டதாவது:வந்தவாசி நகருக்கு வரும் 30 ஆண்டுகளை கணக்கில்கொண்டு அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது வந்தவாசி நகருக்கு குடிநீர் எடுத்து வரும் செய்யாறு ஆற்றில் இருந்துதான் இந்த திட்டத்துக்கும் புதிதாக 4 கிணறுகள் தனித்தனியாக அமைத்து, அதன் மூலம் 17 கி.மீ., தூரத்துக்கான பைப் லைன் (செய்யாறு ஆற்றில் இருந்து வந்தவாசி வரை) அமைத்து, வந்தவாசி நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் கிடைக்கும்படி புதிதாக 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட இடங்களில் தேவைக்கு அதிகமாகவே குடிநீர் கிடைக்கும்.இவ்வாறு பேசினர்.நிகழ்ச்சியில், நகராட்சி கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், அன்சாரி, உசேன், சம்சேந்திரன், ஜலால், பழனியம்மாள், அன்பழகி, வேலன், முத்து, நவாப்ஜான், தானியலட்சுமி, பிச்சைமணி, செல்வம், ரசீத் ஆகியோர் கலந்துகொண்டு திட்டங்களின் பயன்களை கேட்டறிந்தனர்.நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்