தினமலர் 12.03.2010
ராமநாதபுரத்தில் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நகராட்சி ரெடி பாதாள சாக்கடை திட்டமும் ஜரூர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கோடை கால குடிநீர் தட்டப்பாட்டை தவிர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதால் மே இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் நகராட்சிக்கு மட்டும் தினம் 32 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் குழாய்களில் ஏற்பட்ட பிரச்னைகளால் தடங்கள் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பணி விரைவாக நடந்து வருகிறது. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் முஜ்புர்ரஹ்மான் கூறியதாவது: குடிநீர் வினியோகத்தில் குழாய்களால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்யவும்,புதிய குழாய்கள் அமைக்கவும் 1.61 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே தினமும் 32 லட்சம் லிட்டர் குடிநீர் ,மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப் பட்டு வினியோகம் செய் யப்படுகிறது. குழாய்கள் பிரச்னை உள்ள பகுதிகளில், குழாய் பதிக்கும் பணி முடிந்தபின் ,நகராட்சியில் குடிநீர் தன்னிறைவாக கிடைக்கும். மேலும் ,கோடை காலத்தில் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். தற்போது, வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டவுடன் வழங்கப்படுகிறது.
5000 ரூபாய் டிப்பாசிட் மற்றும் சென்டேஜ் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் உடனடியாக இணைப்பு கொடுக் கப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 95 சதவீதம் முடிந்து மே மாதம்இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். பாதாள சாக்கடை திட்ட டிப்பாசிட் தொகையை மக்கள் முன்வந்து செலுத்த வேண்டும். ஒரு பகுதியில் வசிப்பவர் எண்ணிக்கையில் ஐம்பது சதவீதத்தினர் டிப்பாசிட் செலுத்திவிட்டால் அப்பகுதிக்கு உடனடியாக ரோடு வசதி செய்து தரப்படும், என்றார்.