தினமலர் 15.03.2010
முழு வீச்சில் காவிரி குடிநீர் திட்டம் : புதிய இணைப்புகள் தயார்
திருப்புத்தூர் : திருப்புத்தூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு காவிரி குடிநீருக்காக ஆறு மேல்நிலை தொட்டிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், இங்கு 10 லட்சம் லிட்டர் அளவுள்ள மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டது. இதில் பழுது ஏற்பட்டதால், ஐந்து லட்சம் லிட்டர் மட்டுமே நீர் நிரப்பப்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டு, முழுமையாக நீர் நிரப்பப்படுகிறது. தம்பிபட்டி, தென்மாப்பட்டு, புதுப்பட்டி, கணேஷ்நகர், காளியம்மன் கோயில், அச்சுக்கட்டு பகுதிகளில் சிறிய மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன. இவை செயல்படாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு தரைமட்ட தொட்டியில் இருந்து நீர் ஏற்றப்படுகிறது. தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்படுகிறது. இதனால், கடந்த பல ஆண்டுகளாக நிலவிய குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
பேரூராட்சியினர் கவனத்திற்கு: புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க பேரூராட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான மனுக்கள் பெறப்படுகின்றன. பணிகளை விரைவுபடுத்தி, இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். இதற்கு போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். பழைய இணைப்புகளை இதுவரை முறைப்படுத்தவில்லை. பல இணைப்புகள் கணக்கில் வரவில்லை. வீடு, வணிக பயன்பாடு என இணைப்புகள் பிரிக்கப்படவில்லை. இவற்றில் பேரூராட்சியினர் கவனம் செலுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் பெரும் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.