மாலை மலர் 18.07.2009
அக்டோபர் 1-ந்தேதி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு
ஐதராபாத், ஜூலை.18- கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆந்திர அரசும், தமிழக அரசும் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 5 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீர் வழங்க ஆந்திர அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் போதிய மழை பெய்யாத தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இதனால் கிருஷ்ணா நதிநீரை திறந்து விடும்படி ஆந்திர அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அக்டோபர் 1-ந்தேதி முதல் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரை திறந்து விட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கான கோப்பில் ஆந்திர நீர்ப்பாசன துறை மந்திரி பொன்னாலா லட்சுமய்யா கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையே அக்டோபர் 1-ந்தேதி முதல் 2 முதல் 3 மாதம் வரை கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.