தினமலர் 18.03.2010
அணைகளில் நீர் குறைவு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்
மதுரை: மதுரைக்கு முதல் வைகை குடிநீர் திட்டம் மூலம், ஒரு நாளைக்கு 68 எம்.எல்டி., (மில்லியன் லிட்டர்), இரண்டாவது திட்டத்தின் மூலம் 47 எம்.எல்டி., சேர்த்து 115 எம்.எல்டி., குடிநீர் தரப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு மதுரையின் குடிநீருக்கு மட்டும் ஏழு எம்.சி.எப்.டி., (மில்லியன் கியூபிக் பீட்) தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மழையும் பெய்யவில்லை. எனவே கோடையில் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீருக்கு வைகை அணையில் இருந்து எடுக்கும் தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு, மாநகராட்சிக்கு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது.இதன் அடிப்படையில், தினமும் குடிநீர் தருவதற்குப் பதில், மார்ச் 22 முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் தரலாம் என மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இப்படி செய்தால் ஜூன் மாதம் குடிநீர் பிரச்னை இருக்காது என மாநகராட்சி எண்ணுகிறது.