தினமலர் 18.03.2010
உள்ளாட்சிகளில் கோடையில் சீரான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
திருநெல்வேலி: கோடை காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெல்லையில் நடந்த முன்னெச்சரிக்கை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் தலைமை வகித்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தாமிரபரணி நதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் கிராமங்கள், டவுன் பஞ்., பகுதிகள், நகராட்சி பகுதிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்க, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் வழங்க தேவையான மின்சார பகுதிகளை மின்சார வாரிய அலுவலர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். திசையன்விளை பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் குடிநீர் வினியோகம் குறித்து இன்று (18ம் தேதி) ஆய்வு செய்கின்றனர்.நான்குநேரி திசையன்விளை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்க குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் இப்பணிகள் நிறைவடையும். கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.கோடை காலத்தில் பஞ்., தலைவர்கள் தங்கள் பகுதியில் சின்டெக்ஸ் தொட்டிகளை அமைத்து குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும். குடிநீர் வினியோக குழாய்கள் பழுதடைந்திருந்தால் அவற்றை அகற்றி புதிய குழாய்கள் பதிக்க குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலநீலிதநல்லூர், தாழையூத்து, மானூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பஞ்.,யூனியன் உதவி இன்ஜினியர்கள், பஞ்., தலைவர்கள் இணைந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.இதில் திட்ட அலுவலர் சங்கர், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் ராம்குமார், ரமேஷ், ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜ ஜெயபாலா, பஞ்.,களின் உதவி இயக்குனர் திரவியம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பார்வதி சங்கர், பஞ்.,யூனியன் தலைவர்கள் மணி, அன்புமணி கணேசன், சிங்கம்புலி பாண்டியன், விஸ்வாமித்ரன், பி.ஆர்.ஓ ரவீந்திரன், மானூர், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், பாளை பஞ்.,யூனியன்களை சேர்ந்த 167 கிராம பஞ்., தலைவர்கள், டவுன் பஞ்., தலைவர்கள், பி.டி.ஓக்கள், டவுன் பஞ்., செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.