தினமணி 18.03.2010
மார்ச் 22 முதல் இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்
மதுரை, மார்ச் 17: மழை அளவு குறைவு மற்றும் கோடை காலத்தையொட்டி மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மார்ச் 22 முதல் இரு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என, மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்துக்கான நீர், பெரியாறு மற்றும் வைகை அணையிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் கோடை காலமாக உள்ளதாலும், இந்த ஆண்டு மழை அளவு குறைந்துள்ளதாலும் பொதுப்பணித் துறை சார்பில் 12.3.2010-ல் மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நாள்தோறும் தற்போது எடுக்கும் 69 மில்லியன் கன அடி நீரை 30 மில்லியன் கன அடியாகக் குறைத்து எடுக்குமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, நிர்வாக நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, இதுவரை தினந்தோறும் வழங்கப்பட்டு வந்த குடிநீர், வரும் 22}ம் தேதி முதல் ஒரு நாள் விட்டு ஒருநாள் விநியோகிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால், தங்களுக்கு ஏற்படும் அசெüகரியத்தை பொருள்படுத்தாமல் மாநகராட்சிக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.