தினமலர் 19.03.2010
நகரப்பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி : நகராட்சி அதிகாரிகள் தீவிரம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் குடிநீர் குழாய்களில் வால்வு பொறுத்தி, பழைய மற்றும் புதிய குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.பொள்ளாச்சி நகராட்சிக்கு பழைய குடிநீர் திட்டம் மற்றும் முதல், இரண்டாம் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அனைத்து குடிநீர் திட்டத்தின் மூலமும் மார்க்கெட் ரோடு பூஸ்டர் ஹவுஸ்க்கு தண்ணீர் வந்ததும், அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலைத்தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.தற்போது, 7.75 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் விஸ்தரிப்பு செய்யும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கடைவீதியில் நேற்று பழைய மற்றும் புதிய குடிநீர் குழாய்களை இணைக்க வால்வு பொறுத்தும் பணி நடந்தது. ஜேசிபி வாகனம் மூலம் வால்வு பொறுத்தும் இடத்தில் குழி தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் இருந்த தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.வெயில் சுட்டெரிக்கும் போது ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சுமார் 30 நிமிடம் தண்ணீர் வெளியேறிய பிறகு, குடிநீர் குழாய்களை இணைத்து வால்வு பொறுத்தும் பணி துவங்கியது.நகராட்சி பொறியாளர் மனோகரன் கூறியதாவது:பொள்ளாச்சியில் குடிநீர் திட்டத்தில் நீர் குழாய்களுக்கு வால்வு பொறுத்தும் பணிகள் நடக்கிறது. மொத்தம் 45 இடங்களில் வால்வு பொறுத்த வேண்டும். தற்போது 20 இடங்களில் வால்வு பொறுத்தப்பட்டுள்ளது.
இன்னும், 25 இடங்களில் வால்வு அமைத்ததும் குடிநீர் வினியோகம் துவங்கப்படும்.ஜோதிநகர் சுற்றுப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் சீராக இல்லை. அதனால், கடைவீதியின் பிரதான குழாயில் வால்வு பொறுத்தி ஜோதிநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடைவீதியில் சந்திரம் ரோடு இணைப்பில் வால்வு பொறுத்திய போது குழாயில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேறியது.திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 7.75 கோடி ரூபாயில், இதுவரை ஐந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வால்வு பொறுத்தும் பணிகள் முடிந்ததும், மே மாதம் முதல் குடிநீர் வினியோகம் துவங்கப்படும். இவ்வாறு, நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.