Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வார்டுக்கு 3 போர்வெல், 3 மினி தொட்டி: வயர்லெஸ் மூலம் கமிஷனர் கண்காணிப்பு

Print PDF

தினமலர் 06.04.2010

நெல்லையில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வார்டுக்கு 3 போர்வெல், 3 மினி தொட்டி: வயர்லெஸ் மூலம் கமிஷனர் கண்காணிப்பு

திருநெல்வேலி:நெல்லையில் கோடை குடிநீர் பிரச்னையை சமாளிக்க வார்டுக்கு 3 போர்வெல், 3 மினி குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.கோடை காலம் துவங்கியுள்ளதால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவருகிறது. ஆற்றிலும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் நெல்லையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கோடை காலம் நிலவி வருவதால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து, தலைமை நீரேற்று நிலையங்களில் நீருந்து செய்யப்படும் குடிநீரின் அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வீட்டின் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.நெல்லை கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளை., தியாகராஜநகர், என்.ஜி..காலனி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை அதிக அளவில் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கோடை கால வறட்சிகளை சமாளிப்பது குறித்து மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் மாநகராட்சியில் நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் பாஸ்கரன், மண்டல தலைவர்கள் சுப.சீதாராமன், முகம்மதுமைதீன், சுப்பிரமணியன், நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் மற்றும் உதவிக்கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி வார்டுக்கு 3 போர்வெல் அமைக்கவும், 3 மினி ஓ.எச்.டி.குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர பழுதடைந்த இயங்காத அடிபம்புகளை கணக்கெடுத்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி உள்ள 6 லாரிகள், ஒரு டிராக்டர் மூலம் எந்தெந்த வார்டுகளுக்கு எத்தனை மணிக்கு தண்ணீர் சப்ளை செய்யவேண்டும் என லாரி டிரைவர்களுக்கு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை காலம் முடியும் வரை தனியார் நிறுவனங்கள் பணம் செலுத்தினாலும் தண்ணீர் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் கருவிகள்மூலம் கண்காணிப்பு:நெல்லை மாநகராட்சி பணியாளர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் கருவிகள் குடிநீர் நீரேற்று நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தினந்தோறும் இரவு நேரங்களில் ஆற்றில் தண்ணீரின் அளவு, நீரேற்று நிலையத்தில் ஏற்றப்பட்டுள்ள குடிநீரின் அளவு, மின்வெட்டு பிரச்னை, மோட்டர்கள் எவ்வளவு நேரம் இயங்குகிறது, அதில் உள்ள குறைபாடுகள் என்ன என்பதை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வயர்லெஸ் கருவி மூலம் அவ்வப்போது பணியாளர்களிடம் தகவல்களை கேட்டு குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறார்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:12