தினமணி 06.04.2010
வைகை குடிநீர் குழாய் உடைப்பு பழுது நீக்கம் இன்று முதல் குடிநீர் விநியோகம் தொடரும்
மதுரை, ஏப். 5: மதுரை மாநகராட்சி முதலாவது வைகை குடிநீர்த் திட்டக் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (ஏப்.6) முதல் குடிநீர் விநியோகம் சீராகத் தொடங்கும் என மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சில நாள்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் முதலாவது குடிநீர்த் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். எனவே தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மாநகராட்சியினர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது மாநகராட்சிப் பணியாளர்கள் குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்தனர். எனவே, செவ்வாய்க்கிழமை முதல் நகரில் குடிநீர் விநியோகம் தடையின்றித் தொடரும்.
கோடை காலம் என்பதால் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கமிஷனர் கேட்டுக்கொண்டார்.