தினமலர் 07.04.2010
மணப்பாறை நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை குளித்தலை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்: கவுன்சிலர்கள் நேரில் ஆய்வால் பரபரப்பு
குளித்தலை: மணப்பாறை நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை காரணம் அறிய, குளித்தலை காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களை கவுன்சிலர்கள் ஆய்வு செய்தனர். மணப்பாறை நகராட்சி மற்றும் 59 கிராமங்களுக்கு குளித்தலை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிகாலத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. கடந்த 1994 ஃபிப்., அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை துவக்கி வைத்தார். திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் ஒரு தொட்டி அமைக்கப்பட்டு ஒன்பது மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு 59 கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
படிப்படியாக தண்ணீர் விநியோகம் குறைந்து கடந்த ஆறு மாதங்களாக மணப்பாறை பகுதியில் வாரம் ஒருமுறை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் கிடைக்காமல் மணப்பாறை பகுதியில் பிரச்னை வலு த்தது. நகராட்சி முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டனர். உண்மை நிலை அறிய மணப்பாறை நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, ராமன், சி.பி.ஐ., கவுன்சிலர் சவுகத் அலி, காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் மற்றும் பலர் குளித்தலை காவிரியில் தண்ணீர் எடுக்கும் நீரேற்று நிலையத்தை பார்வையிட்டனர்.
கவுன்சிலர் ராமமூர்த்தி கூறியதாவது: மணப்பாறையில் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்க நகராட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவுன்சிலர்கள் மீது மக்கள் சந்தேகிக்கின்றனர். இதனால் பிரச்னை குறித்து நேரில் ஆய்வு செய்தோம். தண்ணீர் தொட்டியில் ஒன்பது மோட்டார் இருந்தும், எட்டு பம்புகளில் மணல் அடைத்து தண்ணீர் எடுக்க முடியாத நிலையில் உள்ளன. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் கண்டுகொள்ளாமல் மின்தடையை பொய்யாக காரணம் கூறிவருகிறது. மின்வெட்டு பிரச்னை ஒருபுறம் இருக்க, தற்போதுள்ள குடிநீர் திட்ட ஏற்பாடுகளை பராமரிக்காமல் குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியமாக உள்ளது.
மணப்பாறை நகராட்சி கமிஷனர் அருணாசலம், நகராட்சி தலைவர் சரோஜா ஆகியோர் பிரச்னை குறித்து கண்டுகாணாமல் உள்ளது ஆய்வில் தெரிகிறது. நகராட்சி நிர்வாகம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் குடிநீர் வரி மக்களிடம் வசூல் செய்கிறது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. இந்நிலை தொடர்ந்தால் மணப்பாறையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மணப்பாறை நகராட்சி கமிஷனர் அருணாசலம் கூறியதாவது: காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்குவது குடிநீர் வடிகால் வாரியத்துக்குரியது. நகராட்சி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வந்தால் தான் நகராட்சிக்கு உரியதாகும். காவிரியின் தரை மட்டத்தில் தண்ணீர் குறைந்துவிட்டது. நான் அரசு விதிமுறைகளின் படிதான் செயல்பட முடியும். மணப்பாறை பகுதி குடிநீர் தட்டுபாட்டை லாரி தண்ணீர் மூலம் வழங்கி தீர்த்து வருகிறோம். கவுன்சிலர்கள் ஆய்வு செய்தது எனக்கு தெரியாது. குடிநீர் சப்ளை பிரச்னை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய பொறியாளரிடம் தெரிவித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.