தினமலர் 07.04.2010
குடிநீர் வடிகால் வாரியம் ஒத்துழைப்பில்லை : கலெக்டரிடம் திண்டுக்கல் நகராட்சி புகார்
திண்டுக்கல்: குடிநீர் வடிகால் வாரியம் சரியாக ஒத்துழைக்கவில்லை என கலெக்டரிடம் திண்டுக்கல் நகராட்சி தலைவர், கமிஷனர் புகார் செய்தனர். திண்டுக்கல்லில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சப்ளை செய்யப்பட்ட காவிரி குடிநீர் திட்ட குடிநீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தரையடி மெயின் குழாய்களுக்கு மற்ற குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கப்படவில்லை. வால்வுகள் சரிசெய்யப்படவில்லை.இதனால் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இது குறித்து வடிகால் வாரியத்திடம் நகராட்சி நிர்வாகம் நேரடியாக கேட்டும் பலன் இல்லை. நகராட்சி தலைவர் நடராஜன், கமிஷனர் லட்சுமி , அதிகாரிகள் கலெக்டர் வள்ளலாரை நேரில் சந்தித்து குடிநீர் வடிகால் வாரியத்தின் மெத்தன போக்கு குறித்து புகார் செய்தனர்.