தினமணி 07.04.2010
வைகையில் மதுரை குடிநீருக்குத் தேவையான தண்ணீர் உள்ளது
மதுரை, ஏப். 6: குடிநீர் விநியோகத்துக்கு வைகை அணையில் மே மாதம் வரை தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளது. மேலும் மதுரையில் குப்பைகளை விரைவில் அகற்றுவதற்காக 400 தாற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு தாற்காலிகப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகரில் குப்பைகளை உடனே அகற்றும் பணிக்காக 400 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் 80 குடிநீர்த் தொட்டிகளும், திருவிழாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட உள்ளன.
குடிநீர் விநியோகத்துக்கு வைகை அணையில் மே மாதம் வரையில் தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளது. கரிமேடு மீன் மார்க்கெட் ஏலதாரருக்கு மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலிக்க அது குறித்த விவரத்தை எழுதி வைக்க வேண்டும். எனவே மீன் கடைகளைத் திறக்க வேண்டும்.
அதேபோல் மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் ஆண்டுதோறும் தண்ணீர் நிரப்ப ரூ.46 லட்சம் மதிப்பீடு செய்துள்ள நிலையில், அதில் மாநகராட்சி சார்பில் ரூ.20 லட்சம் வழங்கவும், மீதத் தொகை கோயில் நிர்வாகம் வழங்குமாறும் கடிதம் அனுப்பினர்.
அதற்குக் கோயில் நிர்வாகம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்குமாறு கோரி உள்ளனர். இக்கடிதத்தின் மீது மாமன்றக் கூட்டத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.