தினமணி 08.04.2010
சீரான குடிநீர் விநியோகம்: மேயர் தலைமையில் ஆய்வு
மதுரை, ஏப். 7: மாநகராட்சிப் பகுதியில் நான்கு மண்டலங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் சரியான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாநகராட்சி மேயர் ஜி.தேன்மொழி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆணையர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டுகளில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்தும், குடிநீரில் சாக்கடை கலந்து வருவதை சரிசெய்யவும், பழுதைடைந்த அடிபம்பு குழாய்களை மாற்றவும், குடிநீர் வராத தெருக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.
இதுகுறித்து மேயர் தேன்மொழி கூறுகையில், சில வார்டுகளில் குடிநீர் சரியாக வருவதில்லை என்றும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.
குடிநீர் விநியோகம் சீராக செய்வது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை உடனே பார்வையிட்டு சரிசெய்யும் பணியை விரைவில் முடிக்குமாறும் அதிகாரிகளிடம் மேயர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் இசக்கிமுத்து, வி.கே.குருசாமி, மாணிக்கம், நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.