தினமணி 12.04.2010
பிரதான குழாயில் உடைப்பு: இன்றும், நாளையும் குடிநீர் நிறுத்தம்
நாகர்கோவில், ஏப். 11: பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், நாகர்கோவில் நகராட்சியில் திங்கள், செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது.
இதுதொடர்பாக நகர்மன்ற ஆணையர் ஜானகி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் மழை இல்லாததால் நீர்மட்டம் 2 அடியாக உள்ளது. இதையடுத்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் அனந்தனாறு கால்வாய் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முக்கடலிலிருந்து நாகர்கோவில் வரும் பிரதான குழாயில் நாவல்காடு அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், திங்கள், செவ்வாய்க்கிழமை நகரப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, கிடைக்கும் நீரை பொதுமக்கள் சேமித்து வைத்து பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.