Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னை: விடியோ கான்பரன்ஸ் முறையில் தலைமைச் செயலர் ஆலோசனை

Print PDF

தினமணி 16.04.2010

குடிநீர் பிரச்னை: விடியோ கான்பரன்ஸ் முறையில் தலைமைச் செயலர் ஆலோசனை

திண்டுக்கல், ஏப். 15: திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலாருடன் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி வியாழக்கிழமை விடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த ஆண்டின் சராசரி மழை அளவு 836 மி.மீ. கடந்த ஆண்டு 172 மி.மீ. குறைந்து 656 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்னையைத் தீர்க்க ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகளை ஆழப்படுத்துவது போன்ற பணிகளில் குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர்நில ஆய்வாளர் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனையின்போது அறிவுறுத்தப்பட்டது.

தலைமைச் செயலருடனான ஆலோசனை குறித்து ஆட்சியர் கூறியதாவது:

திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை, தொப்பம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. மேலும் திண்டுக்கல் நகராட்சிப் பகுதியில் 12 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 9 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பழனியில் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கொடைக்கானல் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இல்லை.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

Last Updated on Friday, 16 April 2010 09:54