தினமணி 16.04.2010
குடிநீர் விநியோகத்திற்கு மின்தடை கூடாது
விழுப்புரம், ஏப். 15: தமிழகத்தில் எங்கும் வறட்சி இல்லை; ஒரு சில இடங்களில் குடிநீர் பிரச்னை மட்டும் உள்ளது. குடிநீர் விநியோகத்திற்கு மின்தடை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர்களுடன் விடியோ கான்பரன்சிஸிங் மூலம் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் ஸ்ரீபதி தெரிவித்தார்.
÷தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைகள் குறித்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரத்தேவன் ஆகியோர் வியாழக்கிழமை காலை விடியோ கான்பரன்ஸிங் மூலம் ஆலோசனை நடத்தினர்.
÷அப்போது அவர்கள் கூறியது:
÷தமிழகத்தில் சில இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. அதற்காக அனைவரும் சொல்வது போல் வறட்சி என்கிற சூழ்நிலை கிடையாது. நீங்கள் அரசியல்வாதிகள் கிடையாது, அதிகாரிகள். வறட்சி என்கிற வார்த்தையை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது.
÷ஆட்சியர்கள் அனைவரும் குடிநீர் பிரச்னைகள் குறித்து கணக்கெடுங்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அறிக்கை பெறுங்கள். நீராதாரம் எவ்வளவு உள்ளது என்று முதலில் ஆய்வு செய்யுங்கள். அதன்பிறகு ஆழ்துளை கிணறுகள் போடுங்கள்.
திட்டங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். உண்மையிலேயே பாதிக்கப்படும் நிலையில் உள்ள இடங்களுக்கு தேவையான நிதியை தரத்தயாராக உள்ளோம். குடிநீர் விநியோகத்திற்கு மின் இணைப்பு துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுளளது என்று தெரிவித்தனர்.
÷அப்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி கூறியது:
÷விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் குடிநீர் பிரச்னை இல்லை. சின்னசேலம், கள்ளக்குறிச்சி, வானூர், மேல்மலையனூர் போன்ற இடங்களில் மட்டும் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. ஆனால் கடும் பாதிப்பு இல்லை.
÷திண்டிவனம் நகராட்சியில் தினசரி ரூ.20 லட்சம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய வேண்டியுள்ளது. மின்தட்டுப்பாடு உள்ளதால், ஜெனரேட்டர் வாங்க நிதி கேட்டுள்ளோம். தலைமைச் செயலர் தற்போது தெரிவித்துள்ள கருத்தின்படி, மின் துறையை அணுகி, குடிநீர் விநியோகத்திற்கு மின்வெட்டு இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
÷அப்போது தலைமைச் செயலர், அனைத்து ஆட்சியர்களுக்கும் கூறியது:
÷குடிநீர் பிரச்னைகள் குறித்து சாலை மறியல் செய்யும் அளவுக்கு பிரச்னைகள் உண்டா, அப்படி இருந்தால் அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள் என்றார். மேலும் விழுப்புரம் மாவட்டத்துக்கு கோடைக்கால குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.