தினமணி 20.04.2010
ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: தமிழகம் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகம் ஆலோசனை
பெங்களூர், ஏப்.19: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட விவகாரத்தில் மத்திய அரசிடம் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு நடந்துகொள்ளவில்லை. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிடுவேன். இந்த பிரச்னையில் தமிழகத்துக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தத் துவங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு ஜப்பான் வங்கி நிதி உதவி
செய்கிறது. இதன்படி காவிரி ஆற்றில் இருந்து குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் ஒகேனக்கல் பகுதி கர்நாடக எல்லையில் இருப்பதாகக் கூறி இந்த திட்டத்துக்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மேலும் சர்ச்சைக்குரிய பகுதியில் நிலம் அளவை செய்த பிறகு தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் கர்நாடக அரசு கூறிவருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, சமீபத்தில் தமிழக அரசு மாற்றியமைத்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பழைய திட்டப்படி தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்தவில்லை.
முதலில் தீட்டப்பட்ட திட்டப்படி காவிரி ஆற்றிலிருந்து 1.7 டிஎம்சி தண்ணீரைப் பெற்று 30 லட்சம் மக்களுக்கு விநியோகிக்கவே தமிழகம் முடிவு செய்திருந்தது.
ஆனால் கூடுதலாக 15 லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து 2.4 டிஎம்சி தண்ணீரைப் பெறுவதற்காக தமிழக அரசு திட்டத்தை சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது.
இவ்வாறு திட்டத்தை மாற்றியமைப்பது சரியல்ல. பழைய வரையரைப்படியே திட்டத்தை செயல்படுத்துவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் அதன்படி தமிழகம் நடந்து கொள்ளவில்லை. மேலும், காவிரி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்து பெண்ணாறுக்கு மாற்றி திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது, இருமாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பகிர்மான விவகார சட்டத்துக்கு எதிரானதாகும். கடந்த ஆண்டு சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை திறந்துவைத்த எடியூரப்பா, ஒகேனக்கல் திட்ட விவகாரம் குறித்து இருமாநில தலைமைச் செயலர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை இருமாநில அரசும் பேசவில்லை.
இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை தில்லியில் செவ்வாக்கிழமை சந்தித்து முறையிட உள்ளேன். அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் பழைய திட்ட வரையரைப்படியே ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தவிட வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்.
அதைத் தொடந்து இந்த திட்டம் குறித்து கர்நாடக சட்ட வல்லுநர்களுடனும் விவாதிக்க உள்ளேன். இந்த விவகாரத்தில் தமிழகம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்