Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 31 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: திருமூர்த்தி நகரில் அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமணி 21.04.2010

ரூ. 31 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: திருமூர்த்தி நகரில் அதிகாரிகள் ஆய்வு


உடுமலை, ஏப். 20: உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகரில் ரூ. 31 கோடி மதிப்பீட்டில் உருவாகி வரும் கூட்டுக் குடிநீர்த் திட்ட கட்டுமானப் பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரிகள் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியக் குழு பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள், சங்காரம நல்லூர், குமரலிங்கம், கணியூர் பேரூராட்சிகளுக்குள் அடங்கிய 73 கிராமங்களுக்கு அமராவதி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

கோடைக் காலத்தில் அமராவதி ஆற்றில் நீர் வற்றி விடுவதால், உள்ளூர் நீரா தாரங்களும் செயல்படாமல் முடங்கி விடுகின்றன. இதனால் இக்கிராமங்களுக்கு நிரந் தரமான நீராதாரமுள்ள திருமூர்த்தி அணை, தளி கால்வாயில் இருந்து குடிநீர் வழங்க ரூ. 31 கோடியில் சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

ஆண்டு பராமரிப்புக்கு ரூ. 93 லட்சம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பேரூராட்சிகளில் உள்ள நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் குடிநீரும், ஊரக குடியிருப்புகளில் உள்ள நபர் ஒருவருக்கு 40 லிட்டர் குடிநீரும் வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின்படி திருமூர்த்தி அணை தளி வாய்க்காலில் இருந்து நீர் சேகரிப்பு கிணற்றுக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கு நீர் சுத்திகரிப்பு பணிகள் முடிந்தவுடன், 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது.

அங்கிருந்து குழாய்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் 36 கி.மீ. தொலைவில் பேரூராட்சி பகுதிகளுக்கும், 93 கி.மீ. ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக 9 நீருந்துகள் (பழைய 5 நீரூந்துகளையும் சேர்த்து), ஏற்கனவே உள்ள மேல்நிலைத் தொட்டிகள், புதிதாக கட்டப்பட உள்ள 5 மேல் நிலைத் தொட்டிகள், புதிதாக பதிக்கப்பட உள்ள 29 கி.மீ. நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பணிகளை குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் என்.ரவிசந்திரன், மேற்பார்வை பொறியாளர் எஸ்.உமாசங்கர், நிர்வாக பொறியாளர் எஸ்.என்.மோகன்பாபு, உதவி நிர்வாக பொறியாளர் எஸ்.தங்கராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

இவர்களுடன் மடத்துக்குளம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ப.கா.ரங்கசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்களும் ஆய்வு செய்தனர். அப்போது மடத்துக்குளம் ஒன்றியக் குழு சார்பில் அதிகாரிகளிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியது:

2009 மார்ச் மாதம் பணிகள் துவங்கின. வரும் செப்டம்பரில் கட்டுமானப் பணிகளை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 100 சதவிகித பணிகளை முடித்து விடுவோம்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களைச் சேர்ந்த 112 கிராமங்களுக்கும், மடத்துக்குளம், சங்கராமநல்லூர், குமரலிங்கம், கணியூர் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், இந்த திட்டத்தின் படி குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வழியோர கிராம மக்களின் கோரிக்கைப்படி மேலும் ஒரு சில கிராமங்களை இந்த திட்டத்தில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

Last Updated on Wednesday, 21 April 2010 10:34