தினமலர் 23.04.2010
மாவட்டத்தில் பெய்த மழையால் 26 குடிநீர் திட்டங்கள் தப்பின
தேனி:தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் 26 கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு, வைகை ஆற்று படுகையில் 26 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளன. ஆற்றில் நீர் வரத்து இல்லாவிட்டால் குடிநீர் திட்டங்கள் வறண்டு விடும். கடந்த ஐந்து மாதமாக தேனி மாவட்டத்தில் மழை இல்லாததாலும், பெரியாற்றில் நீர் திறக்கப்படாததாலும் 26 குடிநீர் திட்டங்களிலும் உள்ள பம்பிங் கிணறுகளில் நீர் ஊற்று குறைந்து பம்பிங் குறைந்தது.குடிநீர் சப்ளை மிகவும் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் பெரிய அளவு நீர் வரத்து இல்லாவிட்டாலும், மணற்படுகை நிறையும் அளவுக்கு நீர் வரத்து இருந்தது.குடிநீர் திட்ட பம்பிங் கிணறுகள் உள்ள இடத்தில் குறைந்த பட்சம் 9 அடி முதல் 10 அடிவரை மணல் உள்ளது.
இதனால் பம்பிங் கிணறுகளில் நீர் ஊற்று கிடைத்துள்ளது. குடிநீர் திட்டங்களில் பம்பிங் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் வறட்சியின் எல்லைக்கு சென்ற குடிநீர்திட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளதால் குடிநீர் சப்ளையில் சிறிது நாட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது.