தினமணி 24.04.2010
குடிநீர்த் தட்டுப்பாடு 130 பழைய கிணறுகளை ஆழப்படுத்தவும், 60 புதிய கிணறுகளை தோண்டவும் நடவடிக்கை
திருவண்ணாமலை, ஏப்.23: கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 130 பழைய கிணறுகளை ஆழப்படுத்தவும், 60 புதிய கிணறுகளை தோண்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அரசு ரூ.2 கோடியை மாவட்டத்துக்கு ஒதுக்கி உள்ளது. கடந்த காலங்களில் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், சிறுமின் விசை மோட்டார் பம்புகளும் நிறுவப்பட்டன. ஆனால் அவை போதிய பலனைத் தரவில்லை.
இதனால் தற்போது ஏற்கெனவே உள்ள 130 கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 60 புதிய கிணறுகள் தோண்டப்படும். விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும். கிணறுகள் அமைக்க வேண்டிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர்