தினமணி 24.04.2010
திருத்தணி நகராட்சி சார்பில் கூடுதல் குடிநீர் விநியோகம்
திருத்தணி, ஏப். 23: திருத்தணி நகராட்சி ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் இன்னும் கூடுதலாக குடிநீர் வழங்கப்பட உள்ளதாக திருத்தணி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
÷திருத்தணி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தற்போது திருத்தணி வாசிகளுக்கு தினசரி 75 லட்சம் லிட்டர் குடிநீர், நகரின் 21 வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. மேலும் மின்தடை, மோட்டார்கள் பழுது, குடிநீர் குழாய் பைப்புகள் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாலாற்று படுகையிலிருந்து வரும் குடிநீர் கிடைப்பதில் அவ்வப்போது சிக்கல் ஏற்படுகிறது.
÷இதனால், திருத்தணி நகரில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் உத்தரவின் பேரில் திருத்தணி நகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், தாலுக்கா அலுவலகம், திருத்தணி நகராட்சி அலுவலகம், கமலா தியேட்டர் பஸ் நிலையம், பஸ்
பணிமனை உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் திருத்தணியில் உள்ள 21 வார்டுகளிலும் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் புதிதாக வைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்.