தினமணி 24.04.2010
குடிநீர் பிரச்னையைத் தீர்க்க பொது நிதியை பயன்படுத்துங்கள்
வேலூர், ஏப்.23: குடிநீர் பிரச்னையைத் தீர்க்க, உள்ளாட்சி அமைப்புகள் பொதுநிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.
காட்பாடியில் உள்ள தாராபடவேடு நகராட்சியின் புதிய அலுவலக கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யாததால் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்னையை போக்க, தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது. அதிலிருந்து காட்பாடி தொகுதிக்கு ரூ.43 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாராபடவேடு நகராட்சியைப் பொருத்தவரை ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியைக் கொண்டு குடிநீர் பிரச்னையை போக்க வேண்டும். அனைத்து செயல் அலுவலர்களும் குடிநீர் பிரச்னை போக்க மேற்கொண்டுள்ள பணி குறித்து வாரம் ஒரு முறை எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் பொது நிதியை குடிநீர் பிரச்னையைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டும். பொது நிதி என்பது சாலை போடுவதற்காக மட்டும் அல்ல.
அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு சென்றடையும் அலுவலர்கள் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் சோ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஷீலாராஜன், காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் பிரமிளா தயாநிதி, முன்னாள் எம்பி தி.அ.முகமது சகி உள்ளிட்டோர் பேசினர்.