தினமணி 26.04.2010
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை
வேலூர், ஏப்.25: வேலூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என எம்.பி. எம்.அப்துல் ரஹ்மான் கூறினார்.
வேலூர் மக்களவைத் தொகுதி சார்பில் சுகாதாரத் திருவிழா சிறப்பு மருத்துவ முகாம் சார்ப்பனாமேடு ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
வேலூர் மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நீரந்தரத் தீர்வு காண நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர்த் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்து வருகிறோம்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று குடிநீர்ப் பிரச்னை மற்றும் சுகாதாரப் பணிகளில் நாட்டமுடன் செயல்பட்டு வருகிறேன். மிக விரைவில் குடிநீர்த் தட்டுப்பாடு போக்கப்படும் என்றார் அவர்.
முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் பேசியது:
மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேனிங் கருவிகள் நவ்லாக் மற்றும் அலமேலுமங்காபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.6.50 கோடி செலவிடப்பட்டுள்ளது. வேலூரில் தினமும் குடிநீர் வழங்க முழுமுனைப்போடு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது என்றார் அவர்.
முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி 70 பேருக்கு தலா ரூ.6000, ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 43 பேருக்கு தலா ரூ.600 வழங்கப்பட்டன.
விழாவில் எம்எல்ஏ சி.ஞானசேகரன், நலப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கே.எஸ்.டி.சுரேஷ், முன்னாள் எம்பி அ.முகமது சகி, மாநகராட்சி துணை மேயர் தி.ஆ.முகமது சாதிக் பாஷா, காசநோய் துணை இயக்குநர் ராஜாசிவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.