தினமலர் 26.04.2010
கோவில்பட்டிக்கு தனி குடிநீர் பைப் லைன் திட்டம் ரூ.79.87 கோடியில் திட்ட மதிப்பீடு : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கோவில்பட்டி : கோவில்பட்டி நகர தனி குடிநீர் பைப்லைன் திட்டம் நிறைவேற 79.87 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டு இருப்பதாக நகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியதுகோவில்பட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் மல்லிகா தலைமை வகித்தார். துணை சேர்மன் சந்திரமவுலி, கமிஷ்னர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி முன்னாள் சேர்மன் பெரியநாயகம் தமிழரசன் இறந்ததை நினைவு கொண்டு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அவசர கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய கருத்துக்கள் குறித்து சேர்மன் மல்லிகா பேசினார். அப்போது கோவில்பட்டி நகருக்கு தனிபைப்லைன் திட்டம் கொண்டு வர ஏற்கனவே அனுப்பப்பட்ட திட்டம் நிதிபற்றாக்குறையால் திருப்பப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் திட்டத்தை தற்போதைய விலை நிலவரப்படி 79.87 கோடியில் மாற்றி அரசின் அனுமதி பெற அனுப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.தொடர்ந்து கூட்டப்பொருட்கள் வாசிக்கப்பட்டது. இதில் முதல் கூட்டப்பொருளான குடிநீர் திட்டம் குறித்து கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். அப்போது குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட அனுமதி கேட்டு தீர்மானம் இருந்ததால் எதிர்ப்பு தெரிவித்த காங்., பெண் கவுன்சிலர் செல்வமணி தீர்மான நகலை கிழித்தார். மேலும் சிபிஐ கவுன்சிலர் தமிழரசன் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதை காரணமாக கொண்டு ஏற்கனவே குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போதும் உயர்த்த கேட்டுள்ளதை எதிர்க்கிறேன் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து திமுக கவுன்சிலர் ராமர் பேசும்போது, தற்போது மானியக் கோரிக்கை நடந்து வருவதால் கோவில்பட்டி குடிநீர் தனி பைப்லைன் திட்ட தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
இறுதியில் கோவில்பட்டி நகர குடிநீர் திட்டத்தினை அனுமதிக்க கேட்டு தற்போதைய விலை நிலவரப்படி ரூ.79.87 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.196 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வழங்கும் நிலையில் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்கலாம் என்றும் முடிவானது. கூட்டத்தில் நகர அமைப்பு அலுவலர் சேதுராஜன், சுகாதார அலுவலர் ராஜசேகரன், இன்ஜினியர் செய்யது அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.