தினமணி 28.04.2010
குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னேற்பாடு
திருச்சி, ஏப். 27: திருச்சி மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மாநகர மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு கம்பரசம்பேட்டை நீர் பணி நிலையம், பொன்மலைக் கூட்டுக் குடிநீர், பிரதான குடிநீர் சேகரிக்கும் கிணறு, தலைமை நீர்ப் பணி நிலையம், கீதாபுரம் நீர்ப் பணி நிலையம் மற்றும் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் நாளொன்ருக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் வீதம் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியின் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையப் பகுதியான காவிரியாற்றின் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க, காவிரியாற்றின் வடகரையோரம் செல்லும் நீரை கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் அருகே தென்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் சேகரிக்கும் கிணறுகளுக்கு அருகே வாய்க்கால் அமைத்தும், தடுப்புகள் அமைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப் பணிகளை மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, கோட்டத் தலைவர்கள் த. குமரேசன் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
கோடை காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய முடியும் என்றும், எனினும் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் குடிநöரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மேயர், ஆணையர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.