Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூர் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 26 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 28.04.2010

கடையநல்லூர் குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 26 கோடி ஒதுக்கீடு

கடையநல்லூர், ஏப். 27: கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த, தமிழக அரசு ரூ. 26 கோடி ஒதுக்கியுள்ளதாக பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந் நகராட்சியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ரூ. 21.6 கோடியில் நிரந்தர குடிநீர் திட்டம் கொண்டு வர எம்எம்ஏ முயற்சி மேற்கொண்டார்.

தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனில், ஏற்கெனவே உள்ள குடிநீர் கட்டணத்தில் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை தெரிவித்தது. ஆனால், குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் இத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததுடன், மன்றத்திலும் பதிவு செய்தனர். இதனால், நகராட்சியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புதிய திட்டம் செயல்படுத்தப்படாமல் முடங்குமோ என அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது.

இதனிடையே, சமூக அக்கறையுள்ள பொதுமக்கள் என்ற பெயரில் வீடு தோறும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டிய காரணங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில், 1 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள இன்றைய கடையநல்லூரில், நகராட்சியாக உருவான போது போடப்பட்ட குடிநீர்க் குழாய்களும், மேல்நிலைத் தொட்டிகளும் மட்டும்தான் உள்ளன. இதனால் 3 தினங்களுக்கு ஒருமுறைதான் நாம் குடிநீர் பெற்று வருகிறோம்.

இந்நிலை மாற, சுமார் 21 கோடியில்புதிய குடிநீர்த் திட்டத்தை கடையநல்லூர் எம்எல்ஏ கொண்டு வர முயல்கிறார். இதை கவுன்சிலர்கள் எதிர்க்கின்றனர். எனவே பொதுமக்களுக்கான இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கவுன்சிலர்களில் பலர் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். கருத்து மாறுபாடுகள் காரணமாக திட்டம் வருவது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் பீட்டர்அல்போன்ஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில், நிரந்தர குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென முதல்வர், துணை முதல்வரிடம் கோரினேன். அதையேற்று அரசு ரூ. 26 கோடி நிதி ஒதுக்கி, அறிவித்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். இத் திட்டத்தை முழு மானியத்தில் செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றார்