Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ.36.66 கோடி: தமிழக அரசுக்கு தி.மலை நகராட்சி நன்றி

Print PDF

தினமணி 28.04.2010

கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ.36.66 கோடி: தமிழக அரசுக்கு தி.மலை நகராட்சி நன்றி

திருவண்ணாமலை, ஏப்.27: திருவண்ணாமலை நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மூன்றாவது கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.36.66 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை நகரில் தற்போது 1.7 லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகருக்கு சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக இரண்டு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மூன்றாவது குடிநீர்த் திட்டம் ரூ.36.66 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இதையடுத்து நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகராட்சி ஆணையர் பி.சேகர், பொறியாளர் சந்திரன், நகர திமுக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதுதொடர்பாக நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதரன் கூறியது:

இத்திட்டத்தின் மூலம் ஜெர்மனி நாட்டு மேம்பாட்டு நிதி உதவியுடன் சாத்தனூர் அணையில் இருந்து நீர் கொண்டு வரப்படும். அரசு ஆண்கள் நகராட்சிப் பள்ளி, பச்சையம்மன் கோயில், தேனிமலை பகுதிகளில் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும். இத்திட்டம் 25 ஆண்டுகளுக்கு பயன் தரும் என்றார்.