தினமலர் 29.04.2010
பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு விஸ்வரூபம் எடுத்தது நீர் தட்டுப்பாடு
கோத்தகிரி: கோத்தகிரி பேரூராட்சி மன்றத்தில், சிறப்பு கூட்டம் நடந்தது. கவுன்சிலர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.தலைமை எழுத்தர் நடராஜ், பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், வரவு, செலவு குறித்து அறிக்கை சமர்பித்தார்.
தங்கேஷ்: இடுக்கரை செல்லும் சாலையில் மண் கொட்டப்பட்டுள்ளதால், வாகனங்கள் பயணிக்க முடிவதில்லை. கிராமத்தில் நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது; உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
வடிவேல்: எனது வார்டுக்கு உட்பட்ட பஜார் பகுதியிலும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; நிரந்தர தீர்வு காணும் வரை, தற்காலிகமாக, லாரிகள் மூலம் வினியோகிக்க வேண்டும். இதே கோரிக்கையை, கவுன்சிலர்கள் கர்ணன், மோகன்தாஸ், ரவிகுமார், கோபால், சீனிவாசன் தெரிவித்தனர்.தலைவர் போஜன்: நீர் பிரச்னை அதிகமுள்ள பகுதிகளுக்கு, பேரூராட்சி மூலம், லாரிகள் மூலம் தற்காலிகமாக நீர் வினியோகிக்கப்படும். பின், தேவையான இடங்களில் கிணறு அமைத்து, குழாய் மூலம் மாற்றியமைத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும்.வாப்பு: காளவாய் பகுதியில் கிணறு அமைத்து, குழாய் மூலம் நீர் கொண்டு வர மோட்டார் அறை கட்ட வேண்டும். வார்டுகளுக்கு, நீர் உட்பட பல தேவைகள் இருக்கும் போது, மன்ற ஒப்புதலுடன் கவுன்சிலர்களுக்கு அரசு நிதியை பிரித்து வழங்க வேண்டும்; மாறாக, தன்னிச்சையாக செயல்படக் கூடாது.
துணைத் தலைவர் செந்தில் ரங்கராஜ்: புயல் நிவாரண நிதி, மன்ற ஒப்புதல் இல்லாமல் ஒரே இடத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த கூட்டங்களில், நீர் பிரச்னை உட்பட, வார்டுகளுக்கு தேவையான பணிகளை கவுன்சிலர்கள் எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், தலைவர் மற்றும் செயல் அலுவலரின் தன்னிச்சைப் போக்கால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
செந்தில் (தி.மு.க.,), மோகன்தாஸ் (காங்.,), வடிவேல் (ம.தி.மு.க.,), வாப்பு (அ.தி.மு.க.,), கருணாகரன் (சுயே) வெளிநடப்பு செய்தனர். மற்ற கவுன்சிலர்களுடன் கூட்டம் நடந்தது.