தினமலர் 29.04.2010
தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடம் முன்பு இரண்டு கலர்களில் செயற்கை நீருற்று சோதனை
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டடத்தின் முன்பு இரண்டு வண்ண கலரில் செயற்கை நீரூற்று நேற்று சோதனை செய்யப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் அதனை பார்த்து ரசித்தனர்.தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக கட்டடம் 4 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டன. சிறிய வேலைகள் மட்டும் பாக்கியுள்ளது. அந்த வேலைகளும் முடியும் தருவாயை எட்டியுள்ளது. மிக விரைவில் துணை முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மாநகராட்சி கட்டடத்தின் முன்பகுதி முழுவதும் கூலிங் கிளாஸ் என்பதால் எதிர்பகுதி மெயின் ரோடு அதில் செல்லும் வாகனம் உட்பட அனைத்தும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. இந்நிலையில் மாநகராட்சி புதிய கட்டடத்தின் முன் பகுதியில் செயற்கை நீருற்று இரு கலரில் இரவு முழுவதும் தொடர்ந்து மிளிரும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் சுமார் 4 லட்ச ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. செயற்கை நீருற்றின் ரவுண்டானாவை சுற்றி பச்சை மற்றும் சிவப்பு கலர்களில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் மாறி, மாறி இவை இரவு எறிந்து, அணையும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இரண்டு கலர்களும் மாறி, மாறி செயற்கை நீருற்றாக எரிந்ததை அந்த பகுதி மக்கள் ரசித்து பார்த்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதி என்பதால் பெரும் கூட்டமே வந்த இதனை பார்த்து ரசித்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.