தினமலர் 29.04.2010
தேனியில் போர்வெல் குடிநீர்சப்ளை செய்யும் திட்டம் தாமதம்
தேனி: தேனியில் நகராட்சி வார்டுகளில் போர்வெல் அமைத்து குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆகியும் பணிகள் நடக்கவில்லை.
தேனிக்கு அரப்படித்தேவன்பட்டியில் வைகை ஆற்றினுள் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள், பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைக்கிணறு, வீரப்ப அய்யனார் கோயில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோடை காலத்தில் முல்லை பெரியாற்றில் தண்ணீர் நிறுத்தப்படும் போது ஆறு வறண்டு விடுவதால் உறைகிணறுகளில் தண்ணீர் வருவதில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதே போல் மழைக்காலத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உறைகிணறுகள் மூழ்கி விடுவதாலும், சேதமடைவதாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நிரந்தர குடிநீர் திட்டம் இல்லாததே இதற்கு காரணம். இந்நிலையில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி சார்பில் 33 வார்டுகளிலும் தலா ஒரு போர்வெல் அமைத்து குடிநீர் சப்ளை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் நடக்கவில்லை. தற்போதுள்ள பழைய போர்வெல்களில் 50 சதவீதம் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளன. பல பகுதிகளில் மோட்டார் பழுதடைந்துள்ளன. குடிநீர் தேவையை போக்க போர்வெல்கள் அமைப்பது அவசியமானது. இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்.