தினமணி 24.07.2009
வீட்டு குடிநீர் இணைப்புகளில் இருந்த மின்சார மோட்டார்கள் அகற்றம்
கடலூர், ஜூலை 23: கடலூரில் நகராட்சி வீட்டுக் குடிநீர் இணைப்புகளில் பொருத்தி இருந்த மோட்டார்கள் அகற்றப்பட்டன.
கடலூர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1,400 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு நகராட்சிக் குடிநீர் ஒழுங்காகக் கிடைக்கவில்லை என்று, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் செவ்வாய்க்கிழமைகாலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏணிக்காரான் தோட்டம் பகுதியில் வீட்டுக் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரைப் பெருமளவுக்கு உறிஞ்சுவதால்தான், தங்கள் பகுதிக்குத் தண்ணீர் வருவதில்லை என்று சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் புதன்கிழமை ஏணிக்காரன் தோட்டம் பகுதியை கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஆணையர் குமார் பொறியாளர் மனோகர் சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
5 வீடுகளில் நகராட்சிக் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக மின்மோட்டார்கள் துண்டிக்கப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
சுனாமி குடியிருப்புப் பகுதிகளுக்குப் போதுமான அளவு குடிநீர் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக ஆணையர் குமார் தெரிவித்தார்