தினமணி 03.05.2010
நாகர்கோவிலில் குடிநீர்த் தட்டுப்பாடு: பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு
நாகர்கோவில், மே 2:நாகர்கோவிலில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க பெருஞ்சாணி அணையில் இருந்து சனிக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
நாகர்கோவில் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. அண்மைக் காலமாக மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து விட்டது.
இதைத் தொடர்ந்து நகரப் பகுதியில் 7 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில தினங்களாக அணைப் பகுதிகளில் சீரான மழை பெய்து வருவதால் முக்கடல் அணையின் நீர்மட்டம் 18 அடியாக உயர்ந்தது.
இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன், ஆணையர் ஜானகி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் நாகர்கோவிலில் குடிநீர்ப் பிரச்னையைப் போக்க பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, பெருஞ்சாணி அணையில் இருந்து சனிக்கிழமை 27 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இத் தண்ணீர் முக்கடல் அணையை வந்தடைந்தது. இதனால், நாகர்கோவில் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்னை ஓரளவுக்குத் தீரும் எனத் தெரிகிறது.