தினமணி 03.05.2010
கரூர் அரசு மருத்துவமனையில் சூரிய சக்தியில் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம் அமைக்க ஆய்வு
கரூர், மே 2: கரூர் அரசு மருத்துவமனையில் சூரிய சக்தியில் குடிநீர் சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஆனால், முழு நேரமும் நகராட்சி குடிநீர் விநியோகித்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்ற நிலை உருவாகியுள்ளது.
கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்படாததாலும், அங்குள்ள குடிநீர்த் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படாததாலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பார்வையாளர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிப்பதால், பல்வேறு நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர் என்று அண்மையில் தினமணியில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தது:
மருத்துவமனைக்கு தினமும் சுமார் 25 ஆயிரம் லி. தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், நகராட்சியிலிருந்து தினமும் தண்ணீர் விநியோகிக்கப்படாததால், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும், நோயாளிகளுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அந்தந்த வார்டுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், நோயாளிகளைக் காண வரும் பார்வையாளர்கள் குடிநீர்த் தொட்டிகளில் ஏற்றப்படும் தண்ணீரை குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் பயன்படுத்துகின்றனர். எனவே, நோயாளிகள், பார்வையாளர்களுக்கு போதிய அளவு குடிநீர் வழங்க முடியவில்லை.
குடிநீர் தட்டுப்பாடு நகராட்சி அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மருத்துவமனையில் ஆய்வு செய்து, முழு நேரமும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
தற்போது, மகப்பேறு வார்டின் மேல்பகுதியில் மரபுசாரா எரிசக்தித் துறையின் மூலமாக சூரிய சக்தியின் மூலம் குடிநீரை சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 2 மாதத்துக்குள் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். ஆனால், நகராட்சியிலிருந்து முழு நேரமும் தண்ணீர் விநியோகித்தால் மட்டுமே, இந்தத் திட்டமும் சாத்தியமாகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.