Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

கால்வாய் சேதம் அடைந்ததால் பூண்டிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதில் தாமதம்

Print PDF

மாலை மலர்          05.07.2013

கால்வாய் சேதம் அடைந்ததால் பூண்டிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதில் தாமதம்
 
கால்வாய் சேதம் அடைந்ததால் பூண்டிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதில் தாமதம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு ஆந்திராவில் உள்ள கண்டலேறு ஆணையில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

உப்பலமதகு என்ற இடத்தில் கிருஷ்ணா கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் கடந்த 2 மாதமாக கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டது. இப்போது உடைப்பு ஏற்பட்ட இடத்தில் புதிதாக கண்மாய் கட்டப்பட்டுள்ளது. இந்த பணி முழுமையாக முடிவடைந்ததால் கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வினாடிக்கு 500 கன அடி வீதம் கால்வாய் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வரை கிருஷ்ணா கால்வாயின் நீளம் மொத்தம் 153 கிலோ மீட்டர் ஆகும். இதில் 121 கி.மீட்டர் தூரத்தை கடந்து, கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டுள்ள பகுதியை உப்பலமதகு கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை கடந்தது. எனவே, இன்னும் 30 கி.மீட்டர் தூரம் கடந்தால் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு தண்ணீர் வந்து சேரும். அனேகமாக நாளை காலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரிக்கு 25 கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது. தண்ணீர் வரும் வேகத்தை கணக்கிட்டால் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தான் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும் என தெரிகிறது.

கிருஷ்ணா கால்வாய் ஆங்காங்கே கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் சிமெண்ட் கரைகள் சரிந்து கால்வாய்க்குள் கிடப்பதால் தண்ணீரின் வேகம் தடைபடுகிறது. மேலும் இருபுறமும் செடி, மரங்கள் முளைத்துள்ளதால் கரைகள் வலுவிழந்து உள்ளது. இதனால் தண்ணீரின் வேகம் குறைந்து ஆமை வேகத்தில் கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
 

இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு குடிநீர் விநியோகம் தொடக்கம்

Print PDF

தினமணி             05.07.2013

இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நிறைவு குடிநீர் விநியோகம் தொடக்கம்

பில்லூர் அத்திக்கடவு குடிநீர் விநியோகத்திற்காகப் பதிக்கப்பட்ட சிமென்ட் குழாய்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால், அதற்குப் பதிலாக இரும்புக் குழாய் பதிக்கும் பணிகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து குடிநீர் விநியோகம் தொடங்கியது.

வெள்ளியங்காட்டிலிருந்து வீரபாண்டி, வையம்பாளையம் வழியாக கோவை மாநகரின் ஒரு பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக அப்போது சிமென்ட் குழாய்கள் பதிக்கப்பட்டன. நீரின் அழுத்தம் காரணமாக அடிக்கடி குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு நீர்க் கசிவுகள் ஏற்பட்டன. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பதற்காக, குடிநீர் வடிகால் வாரியம் சிமென்ட் குழாய்களுக்கு மாற்றாக, அதன் அருகிலியே 1,500 மி.மீ. குறுக்கு விட்டமுடைய இரும்புக் குழாய்களைப் பதிக்க முடிவு செய்தது.

இதையடுத்து வீரபாண்டிப் பிரிவிலிருந்து கரட்டு மேடு வரை சுமார் 10 கிமீ தூரத்திற்கு இவை பதிக்கப்பட்டன. கடந்த ஓராண்டாக இப்பணிகள் நடந்தன. நிறைவாக வீரபாண்டி பிரிவில் உள்ள நீர் அழுத்த வெளியேற்று வால்வு இரும்புக்குழாயின் பாதையில் இணைக்கப்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் சொக்கலிங்கம் தலைமையில் பணியாளர்கள் பலர் பொக்லைன் உதவியுடன் இப்பணியில் ஈடுபட்டனர். இனிமேல் இரும்புக் குழாய்கள் வழியாகவே குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளதால், பிரச்னை ஏதும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Print PDF

தினமணி             05.07.2013

இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் திருச்சி மாவட்டம் முத்தரச நல்லூர் தலைமை இடத்தில் மின்தடை மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

  இதனால் நீரேற்றம் நிறுத்தப்படவுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) ஒரு நாள் மட்டும் காவிரி ஆற்றுக்குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 35 of 390