Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ஜூலை முதல் வாரத்தில் சென்னைக்கு கிருஷ்ணா நீர்

Print PDF

தினமணி                28.06.2013

ஜூலை முதல் வாரத்தில் சென்னைக்கு கிருஷ்ணா நீர்

கிருஷ்ணா நதி நீர் ஜூலை முதல் வாரத்தில் சென்னைக்கு வர வாய்ப்புள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

அப்போது விநாடிக்கு 300-லிருந்து 400 கனஅடி தண்ணீர் சென்னை பூண்டி ஏரிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வரும் பட்சத்தில் அடுத்த மாதத்திலிருந்து குடிநீர் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

குடிநீர் பற்றாக்குறை: பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளிலிருந்து குடிநீர் பெறப்பட்டு சென்னை நகரில் விநியோகிக்கப்படுகிறது. தற்போது அந்த ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை.

சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் தற்போது 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு வரும் குடிநீர் நிறுத்தப்பட்டது.

விநியோகம் குறைந்தது: சென்னைக் குடிநீர் வாரியத்தால் நாளொன்றுக்கு 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. குடிநீர் பற்றாக்குறை காரணமாக தற்போது அதன் அளவு 55 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் செய்யப்படும் அளவு குறைந்துள்ளதால் அதனை ஈடு செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெய்வேலியிலிருந்து நாளொன்றுக்கு 2.5 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. பூண்டி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2.9 கோடி லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

சென்னை மாநகர பகுதிகளில் 626 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 676 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக 6,000 மற்றும் 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 308 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 391 லாரிகள் மூலம் நாளொன்றுக்கு 3,700 நடைகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஜூலை மாதம் 5-ஆம் தேதிக்குப் பிறகு கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு கிடைக்ககூடும். ஆகஸ்ட் மாதத்தில் வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் குடிநீரின் அவசியம் கருதி அதனை சிக்கனமாக பயன்படுத்துமாறும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

"ஆத்தூர் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு'

Print PDF

தினமணி               27.06.2013

"ஆத்தூர் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு'

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நகர்மன்றத் தலைவர் பி.உமாராணி தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 ஆத்தூர் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி, நரசிங்கபுரம் கூட்டுறவு வங்கி எதிரே உடைந்துள்ள மேட்டூர்- ஆத்தூர் குடிநீர்க் குழாயை விரைந்து சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

 நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்துவதற்காக காந்தி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மேலும், நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளிலும் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியும், முட்டல் ஏரி, அய்யனார் கோயில் ஏரிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

 இதற்கிடையே தாற்காலிக தீர்வாக ஆத்தூர் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றார் உமாராணி.

 

குடிநீர் பற்றாக்குறை: நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர்               27.06.2013

குடிநீர் பற்றாக்குறை: நகராட்சி நடவடிக்கை


திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சியில் குடி நீர் பற்றாக்குறையை சமாளிக்க லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். திண்டிவனம் நகராட்சியிக்கு புளிச்சப்பள்ளம், கண்ரக்கோட்டை, ரெட்டணை பகுதிகளில் இருந்து குழாய் மூலம் குடி நீர் வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், நேத்தாஜி நகர், சந்தைமேடு, பெருமாள் கோவில் தெரு, உள்பட பல இடங்களில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.போதுமான அளவு மேல் நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் வராததால் அருகிலுள்ள பகுதிக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீரின் அழுத்தம் குறைவால் மற்ற இடங்களில் குடி நீர் பைப்களில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் திண்டிவனம் பகுதியில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடி நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நகராட்சி நிர்வாகம் லாரிகளின் மூலம் மூன்று நாளைக்கு ஒரு முறை குடி நீர் வினியோகம் செய்து வருகின்றனர்.

 


Page 38 of 390