தினமணி 30.07.2009
குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை
வேலூர், ஜூலை 29: வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தொழிற்சாலைகளின் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செ.ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.5 கோடி நிதியை உள்ளாட்சிகளுக்குப் பிரித்து வழங்கியிருந்தார் ஆட்சியர்.
இந் நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், தொடர்ந்து நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான காரணங்கள், அதைத் தீர்க்கத் தேவையான நிதி குறித்து அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருப்பத்தூர், ஆலங்காயம் போன்ற ஒரு சில நகராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை. ஆனால், பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கெனவே, அரசு வழங்கிய ரூ.5 கோடி நிதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் அந்நிதியில் எவ்விதப் பணிகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. ஒப்பந்த நடைமுறையால் தாமதமாகிறது. மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முதல் கட்டமாக, லாரிகள், டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இந்தத் தனியார் லாரிகள் குடிநீர் எடுக்கும் இடத்தைக் கண்டறிந்து, அந்த நீரைப் பரிசோதித்துச் சான்று வழங்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்படும். அவர்கள், தண்ணீர் லாரிகளைக் கண்காணிப்பார்கள்.
குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அரசிடம் ரூ.25 கோடி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும், புதிய கிணறுகள், நீராதாரங்களைக் கண்டறியும் பணி துவங்கும்.
வணிக பயன்பாட்டுக்கான இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. இதுதவிர, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்குப் பெரும்பங்கு நீர் செலவழிக்கப்படுகிறது. இதை முறைப்படுத்தி, பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.
மழை பொழிவை செயற்கையாக உண்டாக்கும் முறை குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்குத் தெரியப்படுத்தப்படும் என்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், வேலூர் மாநகர மேயர் ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.ஷீலாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாட்டு வண்டிகளுக்கு எச்சரிக்கை!
அ னுமதியின்றி மணல் அள்ளும் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
அவர் கூறியது: வேலூர் மாவட்ட குடிநீர்த் தேவைக்காக பாலாற்றில் ஆங்காங்கே கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்படுகிறது. அப் பகுதியிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, கிணறுகள் வறண்டுவிடுவதாகப் புகார்கள் எழுந்தன.
எனவே, பாலாற்றில் மணல் அள்ளும் அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களும், முறையாக அந்தந்தப் பகுதி வட்டாட்சியரிடம் தங்களது மாட்டு வண்டிகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும், குடிநீர்த் திட்டக் கிணறுகள், பாலங்கள் உள்ள இடங்களைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளக் கூடாது. அவ்வாறு மணல் அள்ளினால், மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்படும். பொதுப்பணித்துறையில் ரூ.60 கட்டணம் செலுத்தி மணல் அள்ளும் அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் இது பொருந்தும்.
உரிய பதிவு இன்றி, அனுமதியின்றி மணல் அள்ளும் மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்படும் என்றார் ஆட்சியர் செ.ராஜேந்திரன்