தினமணி 30.07.2009
மெரீனா கடற்கரையில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி திட்டம்
சென்னை, ஜுலை 29: தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் மெரீனா கடற்கரையில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில்தான் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதால் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில் தண்ணீர் விற்க முடியாது. இதனால் மெரீனா கடற்கரையில் குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மெரினா கடற்கரையில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க சென்னை மாநகராட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக வியாழக்கிழமை மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், ரவுண்ட் டேபிள் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
10 குடிநீர் தொட்டிகள் அமைக்கத் திட்டம்: தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 500 மீட்டருக்கு ஒரு தொட்டி என 10 குடிநீர்த் தொட்டிகள் அமைக்க மாநகராட்சி திட்டமிருப்பதாகத் கூறப்படுகிறது. ரூ. 4 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த குடிநீர்த் தொட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.