Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

Print PDF

தினமணி               27.06.2013

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

காஞ்சிபுரத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நகராட்சி நிர்வாகம் மாற்று வழிகளைக் கையாண்டு வருகிறது.

 காஞ்சிபுரம் நகராட்சிக்கு ஓரிக்கை பாலாறு, திருப்பாற்கடல் பாலாறு ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனினும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது காஞ்சிபுரத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலாற்றில் தண்ணீர் ஓட்டம் இல்லாதது, பாலாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவது ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

உரிய காலத்தில் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியிருந்தால் ஓரளவுக்கு குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி இருக்க முடியும் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 தொடர் மணல் கொள்ளையால் காஞ்சிபுரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் செயல்படும் பாலாற்று குடிநீர்த் திட்டங்கள் முடங்கியுள்ளன. குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக குடிநீர் பஞ்சம் என்ற வார்த்தையை கேட்டறியாத காஞ்சிபுரம் மக்கள் இப்போது குடிநீர் பஞ்சத்தால், தினமும் சாலையில் காலிக் குடங்களுடன் வந்து நிற்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓரிக்கை பாலாறு படுகையில் உள்ள குடிநீர் ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் கிடைக்காததால், நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் தவித்து வருகிறது. தினமும் குடிநீர் விநியோகித்த காலம் போய், 2 நாளைக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்க முடியும் என்று நகராட்சி அறிவித்தும் பயனில்லாமல் உள்ளது.

 குறிப்பாக 18, 19, 20, 21, 22, 23 ஆகிய வார்டு பகுதிகளுக்கு காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இத்தொட்டிக்கு ஓரிக்கை பாலாற்று நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் ஏற்றப்படுகிறது. ஆனால் போதிய அளவு அழுத்தம் இல்லாமல் இப்பகுதியில் குடிநீர் விநியோகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 எனவே இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு திருப்பாற்கடல் பாலாற்று குடிநீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் ஏற்றி விநியோகிக்க நகராட்சி முடிவு செய்யது. அதற்காக காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள திருப்பாற்கடல் பிரதான பைப் லைனையும்,

ஓரிக்கை பாலாறு பிரதான பைப் லைனையும் இணைத்து திருப்பாற்கடல் நீரை பஸ் நிலைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2 நாள்களாக நடந்து வருகிறது. இதன் மூலம் குடிநீர் பாதிப்பு இல்லாமல் விநியோகிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 23-வது வார்டு பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையர் விமலா, தலைமை பொறியாளர் சுப்புராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசி சமாதானம் செய்தனர்.

  இதற்கிடையில் குடிநீர் வழங்க நகராட்சி செய்து வரும் மாற்றுப்பணிகளை பார்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் சோமசுந்தரம், பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Last Updated on Thursday, 27 June 2013 07:28
 

கோவையில் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வினியோகம் மாநகராட்சி கமிஷனர் லதா தகவல்

Print PDF

தினத்தந்தி               26.06.2013

கோவையில் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வினியோகம் மாநகராட்சி கமிஷனர் லதா தகவல்


கோவை மாநகராட்சி பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர்லதா கூறினார்.

சிறுவாணி அணை

கடந்த ஆண்டுகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்து கொண்டே வந்தது. இதனால் ஆற்றில் இருந்து 6 மோட்டார்கள் மூலம் பம்பிங் செய்து குடிநீர் எடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கும் போது தினசரி 30 எம்.எல்.டி குடிநீர் தான் கோவைக்கு வினியோகம் செய்ய முடிந்தது.

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் இருப்பு நிலையை தாண்டி தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நேற்று மட்டும் 65 எம்.எல்.டி குடிநீர் கோவைக்கு எடுக்கப்பட்டது. சிறுவாணியின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், கோவைக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை நிரம்பி விட்டது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

பில்லூர் குடிநீர் திட்டங்கள்

இதைத் தொடர்ந்து பில்லூர் முதல், மற்றும் 2–வது குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்ட அளவான 125 எம்.எல்.டியில் இருந்து 120 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதி வார்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இது தவிர குறிச்சி குனியமுத்தூர் பகுதிகளில் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. மேலும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 11 எம்.எல்.டி தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் கோவை மாநகராட்சியை பொறுத்தவரை விரிவுப்படுத்தப்பட்டு 100 வார்டுகள் ஆகி விட்டதால் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் என்பது பிரச்சினையாக இருந்தது.

4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

சமீபகாலமாக ஒரு சில பகுதிகளை தவிர பிற பகுதிகளில் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்ற நிலை காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவு அதிகரித்துள்ளதால், கோவையில் குடிநீர் வினியோகம் சீராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்த கோவை மாநகராட்சி கமிஷனர் லதா விடம் கேட்ட போது அவர் கூறியதாவது:– கோவைக்கு தற்போது பில்லூர், சிறுவாணி அணைகள் மூலம் தினசரி 10 எம்.எல்.டி கூடுதலாக குடிநீர் கிடைக்கிறது. இதனால் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து பகுதிகளிலும் சீராக கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

தென்மேற்கு பருவமழை தீவிரம்: சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக உயர்வு கோவைக்கு தினசரி 60 எம்.எல்.டி குடிநீர் வினியோகம்

Print PDF

தினத்தந்தி               26.06.2013

தென்மேற்கு பருவமழை தீவிரம்: சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக உயர்வு கோவைக்கு தினசரி 60 எம்.எல்.டி குடிநீர் வினியோகம்


சிறுவாணி அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கோவைக்கு தினசரி 60 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி அணை

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் அணை வறண்டு போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனால் கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குட்டை போல் தேங்கி கிடந்த பகுதியில் இருந்து 6 மோட்டார்கள் வைத்து, தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் அவல நிலை ஏற்பட்டது.

190 சென்டி மீட்டர் மழை

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 190 மில்லி மீட்டர்(19 சென்டி மீட்டர்) மழை பெய்தது. இதனால் சிறுவாணி அணையின் இருப்பு நிலைக்கு மேல் நீர்மட்டம் கிடு,கிடுவென உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்படும் 4 வால்வுகளில் 2 வால்வுகள் தண்ணீருக்குள் மூழ்கி விட்டன. இதனால் சிறுவாணி அணையின் (மொத்த கொள்ளவு 50 அடி) நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்து உள்ளது.

தினசரி 60 எம்.எல்.டி தண்ணீர்

இது குறித்து கோவை குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் இக்பால், சம்பத் குமார் ஆகியோர் கூறுகையில், சிறுவாணி அணையின் மேற்புறத்திலும், அடிவாரத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் கோவைக்கு தினசரி 60 எம்.எல்.டி (6 கோடி லிட்டர்) தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை விட, இது 5 அடி கூடுதல் ஆகும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அணை நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது. அணை நிரம்பினால் சிறுவாணி குடிநீருக்கு பிரச்சினை இருக்காது என்று அவர்கள் கூறினார்கள்.
 


Page 39 of 390