Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

காவிரியில் 5 ஆழ்குழாய், மாநகரில் 50 ஆழ்குழாய் கிணறுகள்

Print PDF
தினமணி       04.04.2013

காவிரியில் 5 ஆழ்குழாய், மாநகரில் 50 ஆழ்குழாய் கிணறுகள்

கோடைகாலத்தில் திருச்சி மாநகரின் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், காவிரியில் 5 புதிய ஆழ்குழாய் கிணறுகள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ள காவிரியாற்றில் ரூ. 55 லட்சத்தில் 5 புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணியை மேயர் அ. ஜெயா புதன்கிழமை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திருச்சி மாநகராட்சியில் கோடைகாலத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ரூ. 3.59 கோடியை முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இதன்மூலம் காவிரியாற்றில் 60 அடி ஆழத்தில் 5 ஆழ்குழாய் கிணறுகள் அம்க்கப்பட்டு வருகின்றன. இதற்காக புதிய மின்மோட்டார், இணைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. வறட்சியான காலத்திலும் 92 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தலா ரூ. 40 ஆயிரத்தில் 50 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 50 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. 10 இடங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் பவர் பம்புகள் அமைக்கப்படுகின்றன.

மின்தட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு 5 புதிய ஜெனரேட்டர்கள் ரூ. 1.18 கோடியில் வாங்கப்படுகின்றன. மேலும், 11 லாரிகள் ஏற்கெனவே குடிநீர் விநியோகத்துக்காக பயன்பட்டு வரும் நிலையில், மேலும் 4 லாரிகள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் ஜெயா.

ஆய்வின்போது கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், ஆர். ஞானசேகர், எம். லதா, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து கோ-அபிஷேகபுரம் கோட்டம் 54-வது வார்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதையும் மேயர் ஆய்வு செய்தார்.
 

35% குறைந்தது சென்னை ஏரிகளின் நீர் இருப்பு: குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை

Print PDF

தினமணி                   04.04.2013

35% குறைந்தது சென்னை ஏரிகளின் நீர் இருப்பு: குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை

 

மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது: சேலம் உள்பட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Print PDF

தினத்தந்தி        04.04.2013

மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது: சேலம் உள்பட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் 

மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி. தண்ணீரே உள்ளதால் சேலம் உள்பட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோடை மழை கை கொடுக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேட்டூர் அணை

பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934–ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்பட 11 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல இந்த 16 மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் மேட்டூர் அணை பூர்த்தி செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்போது, வழித்தடங்களில் இருக்கும் மாவட்டங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளையும் காவிரி ஆறு நிரப்பிச்செல்கிறது. இதன்மூலம் அந்த பகுதியின் குடிநீர் தேவை பூர்த்தியாவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயருகிறது.

குடிநீர் திட்டங்கள்

இதற்கிடையே, மேட்டூர் அணையை நம்பி இந்த 11 மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு குடிநீர் திட்டங்களும் பயன்பட்டு வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பி.என்.பட்டி–வீரக்கல்புதூர் கூட்டுக்குடிநீர் திட்டம், கொளத்தூர் பேரூராட்சி குடிநீர் திட்டம், சேலம்–ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மேட்டூர் அணையை நம்பி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டம், வேலூர் மாநகராட்சி குடிநீர் திட்டம் மற்றும் மேட்டூர் நகராட்சி தனி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மாதேஸ்வரன் மலைக்கு குடிநீர்

இதுமட்டுமின்றி தமிழக–கர்நாடக எல்லைப்பகுதியான அடிபாலாறு என்ற இடத்தில் அணையின் நீர்த்தேக்கப்பரப்பில் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு குடிநீர் எடுத்துச்செல்வதற்காக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக இந்த பகுதியில் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்து விட்டது. மேலும், மேட்டூர் அனல் மின்நிலையம் உள்பட நகரை சுற்றி உள்ள தனியார் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்துதான் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

பருவமழை பொய்த்தது

இந்நிலையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும், பருவமழையை எதிர்நோக்கி கடந்த செப்டம்பர் மாதம் 17–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஏற்கனவே, நீர்வரத்து இல்லாததால் குறைந்துபோன மேட்டூர் அணையின் நீர்மட்டம், இந்த தண்ணீர் திறப்பின் காரணமாக மேலும் குறைந்து வந்தது. அதாவது, 50 அடியில் இருந்து படிப்படியாக குறைந்து வந்த நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 26.89 அடியாக சரிந்தது. அதாவது, அணையில் தற்போது 6 டி.எம்.சி. தண்ணீரே உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து சுட்டெரிக்கும் அனல் பறக்கிறது. எனவே, அடுத்த பருவமழை காலமான ஜூன் மாதம் வரை மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இருப்பு குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

இதனால் வறட்சியை எதிர்நோக்கும் நிலையும், சேலம் உள்பட 11 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையை போக்க கோடைமழை கை கொடுக்குமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Last Updated on Friday, 05 April 2013 10:36
 


Page 68 of 390