தினமணி 13.03.2013
உத்தங்குடி, திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாடு
உத்தங்குடி, திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து, செவ்வாய்க்கிழமை மேயர் ராஜன்செல்லப்பாவும், ஆணையர் ஆர். நந்தகோபாலும் ஆய்வு மேற்கொண்டனர்.
மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டு எண்-28- உத்தங்குடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.
அப்பகுதியிலுள்ள மின்மோட்டார்களை சரிசெய்து, மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீரை ஏற்றி, குழாய் மூலம் விநியோகம் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
ஒரு வாரத்துக்குள் மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீரை ஏற்றி விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
வார்டு 23-விளாங்குடி பகுதியில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் போர்வெல் அமைத்து, தரைமட்டத் தொட்டி மூலம் தண்ணீர் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.
வார்டுகள் 95 முதல் 99 வரையுள்ள திருப்பரங்குன்றம் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து, அப்பகுதி மாமன்ற உறுப்பினர்களுடன் இருவரும் கருத்துகள் கேட்டனர். இந்த வார்டு பகுதிகளில் 25 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க மேயர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, உதவி ஆணையர் அ.தேவதாஸ், செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், ஜெயசீலன், மாமன்ற உறுப்பினர்கள் முத்துப்பொன்னு, திரவியம், முத்துக்குமார், அமிதாபேகம், சந்தியா, நாகலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.