Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

உத்தங்குடி, திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாடு

Print PDF

தினமணி                 13.03.2013

உத்தங்குடி, திருப்பரங்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாடு

உத்தங்குடி, திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து, செவ்வாய்க்கிழமை மேயர் ராஜன்செல்லப்பாவும், ஆணையர்  ஆர். நந்தகோபாலும் ஆய்வு மேற்கொண்டனர்.

மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டு எண்-28- உத்தங்குடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.

அப்பகுதியிலுள்ள மின்மோட்டார்களை சரிசெய்து, மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீரை ஏற்றி, குழாய் மூலம் விநியோகம் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஒரு வாரத்துக்குள் மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீரை ஏற்றி விநியோகம் செய்யுமாறு  அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

வார்டு 23-விளாங்குடி பகுதியில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில்   போர்வெல் அமைத்து, தரைமட்டத் தொட்டி மூலம் தண்ணீர் வழங்க சம்பந்தப்பட்ட  அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.

வார்டுகள் 95 முதல் 99 வரையுள்ள திருப்பரங்குன்றம் பகுதிகளில் நிலவும் குடிநீர்  தட்டுப்பாடு குறித்து, அப்பகுதி மாமன்ற உறுப்பினர்களுடன் இருவரும் கருத்துகள்  கேட்டனர். இந்த வார்டு பகுதிகளில் 25 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க மேயர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, உதவி ஆணையர் அ.தேவதாஸ், செயற்பொறியாளர்கள்  சந்திரசேகரன், ஜெயசீலன், மாமன்ற உறுப்பினர்கள் முத்துப்பொன்னு, திரவியம், முத்துக்குமார், அமிதாபேகம், சந்தியா, நாகலட்சுமி மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.

 

மழைநீர் வாய்க்கால் பணிகள்: நகராட்சிகள் நிர்வாகப் பொறியாளர் ஆய்வு

Print PDF
தினமணி         11.03.2013

மழைநீர் வாய்க்கால் பணிகள்: நகராட்சிகள் நிர்வாகப் பொறியாளர் ஆய்வு

மதுரையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளை உரிய  காலத்திற்குள் கட்டி முடிக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு நகராட்சிகள் நிர்வாக  ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் ஆர். வெங்கடாச்சலம் அறிவுறுத்தினார்.

மதுரை மாநகராட்சியில் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  கோ.புதூர், வில்லாபுரம், டி.பி. சாலை, எப்.எப். சாலை உள்ளிட்ட 15-க்கும்  மேற்பட்ட இடங்களில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆர். வெங்கடாச்சலம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைவுபடுத்தி உரிய காலத்திற்குள் முடிக்குமாறு  மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) மதுரம், செயற்பொறியாளர்கள்  அரசு,ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

ஆய்வு குறித்து பொறியாளர் மதுரம் கூறியது:   ஜவாஹர்லால் நேரு நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மழைநீர் வடிகால்  வாய்க்கால்களில் கான்கிரீட் தடுப்புச்சுவர், தரைத்தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பணிகள் வரும் 2014 மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றார் அவர்.
 

ஏரி சீரமைப்பு பணி: அமைச்சர் ஆய்வு

Print PDF
தினமணி         11.03.2013

ஏரி சீரமைப்பு பணி: அமைச்சர் ஆய்வு


பெருமாள் ஏரி மற்றும் வெலிங்டன் ஏரிகள் ரூ.44.73 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெருமாள் ஏரியின் பிரதான கரை 16 கிலோ மீட்டரும், எதிர் கரையின் நீளம் 16.80 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஏரியின் முழு நீர்மட்ட கொள்ளளவு 574 மில்லியன் கன அடி. 11 பாசன வாய்க்கால்கள் மூலம் 6,503 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில் 2 கலிங்குகள் மற்றும் உபரி நீர் போக்கிகள் உள்ளன.

11 பாசன வாய்க்கால்களின் கரைகளை உயர்த்தவும், உபரி நீர் போக்கி கரைகளை உயர்த்தவும் மொத்தம் ரூ.29.73 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரியும் தூர்வார திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 2,580 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட இந்த ஏரி மூலம் 63 கிராமங்களில் 24,059 ஏக்கர் நிலம் பயனடைகிறது.

இந்த ஏரியில் 7 அடி உயரத்துக்கு மண் மேடு ஏற்பட்டுள்ளதால், தூர்வார திட்டமிட்டு ரூ.15 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஆர்.ஏமராஜ், எம்எல்ஏக்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்பிஎஸ்.சிவசுப்பிரமணியன், கடலூர் நகர் மன்ற தலைவர் சி.கே.சுப்பிரமணியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வி.கந்தன் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.
 


Page 83 of 390