Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

ராமநாதபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது: நகர்மன்ற தலைவர் தகவல்

Print PDF
தினமணி           01.03.2013

ராமநாதபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது:  நகர்மன்ற தலைவர் தகவல்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளதால் கோடை மாதங்களான ஏப்ரல்,மே மாதங்களில் ராமநாதபுரம் நகரில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது என நகர்மன்ற தலைவர் கவிதா சசிக்குமார் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

நகர்மன்ற கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் ,பல்வேறு சதிகளையும் முறியடித்து விடாமுயற்சி மேற்கொண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடக் காரணமாக இருந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழக மக்களும் குறிப்பாக டெல்டா விவசாயிகளும் இதற்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டதால் காவிரி நீரை கர்நாடகம் இனி தரமுடியாது என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. காவிரி நீர் திறந்து விடப்பட்டால் ராமநாதபுரம் நகரில் உள்ள குடிநீர் இணைப்புகள் அனைத்திற்கும் காவிரி தண்ணீர் கிடைக்கும். முக்கியமாக கோடையில்,ஏப்ரல்,மே மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. சுமார் 40லட்சம் மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் எனவும் கவிதா சசிக்குமார் பேசினார்.

கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் முஜ்புர் ரகுமான்,பொறியாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Last Updated on Friday, 01 March 2013 09:49
 

குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கை தேவை: நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Print PDF
தினமணி             01.03.2013

குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கை தேவை:  நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

விருதுநகர் நகராட்சியில் கோடைகாலத்தைச் சமாளிக்க குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

விருதுநகர் நகராட்சிக் குழு கூட்டம் அதன் கூட்டரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் மா. சாந்தி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சேர்மக்கனி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்களிடையே நடைபெற்ற விவாதத்தின் விபரம் வருமாறு:

விருதுநகர் நகராட்சியில் ஆனைக்குட்டம் அணை, ஓண்டிப்புலி கல் கிடங்கு மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் மூலம் வாரத்திற்கு ஒரு முறை 3 மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு மணி நேரமாக குறைந்துள்ளது.

அதனால், கோடைக்காலத்தைச் சமாளிக்க நீர் ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும். நகராட்சி வார்டு பகுதிகளில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மராமத்துப் பணிகள் செய்யப்படாமல் இருக்கின்றன.

இப்பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் இன்னும் முடிவடையாமல் தாமதமாகிக் கொண்டே வருகிறது. அதேபோல், நகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருக்கிறது.

இதைத் தவிர்க்க அப்பகுதிகளில் உடனடியாக தெருவிளக்குகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். கச்சேரி சாலையில் பழைய பஸ் நிலையம் திரும்புகிற இடத்தில் உள்ள நகராட்சி நூலகத்தில் பழமை வாய்ந்த புத்தகங்கள் உள்ளதால், அதனை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தெரிவித்தனர்.

கச்சேரி சாலையில் பஜார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதி நெருக்கடியாக உள்ளது. இச்சாலையின் இரு பகுதியையும் வர்த்தக நிறுவனம் மற்றும் கடைகள் நடத்துகின்றவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் பஸ்களை இந்த வழியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு நகராட்சி தலைவர் மா. சாந்தி பதிலளித்து பேசுகையில், விரிவாக்கப் பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்படும். பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவு பெற்றுவிடும். நூலகத்துக்கு பணியாளர் இல்லாததால் மூடி கிடக்கிறது. இதை மீண்டும் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்யப்படும். நகராட்சியில் மக்கள்தொகை பெருகி வருவதால் அதற்கேற்ப குடிநீர் வழங்குவதற்கு மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கூடுதலாக மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரையில் பாதாளச் சாக்கடை வேலைகள் முடிந்த சாலைகளில் மராமத்து பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நகராட்சி துணைத் தலைவர் எஸ். மாரியப்பன் நன்றி கூறினார்.
Last Updated on Friday, 01 March 2013 09:42
 

நாமக்கல் நகராட்சிக்கு ரூ.100 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

Print PDF
தினமணி                   28.02.2013

நாமக்கல் நகராட்சிக்கு  ரூ.100 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்


விரிவுபடுத்தப்பட்ட நாமக்கல் நகராட்சிப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்றார்போல, ரூ.100 கோடி மதிப்பில் புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த நாமக்கல் நகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, நாமக்கல் நகராட்சியுடன் அருகிலுள்ள 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 29 வார்டுகளாக இருந்த நாமக்கல் நகராட்சி, 39 வார்டுகளாக விரிவடைந்தது. நகராட்சி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய ஏற்கெனவே மூன்று குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் நாளொன்றுக்கு 80 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சி விரிவுபடுத்தப்பட்டதால் குடிநீருக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் நகராட்சியில் 39 எம்எல்டி (தினசரி 3.90 கோடி லிட்டர்) குடிநீர் விநியோகிக்கும் 4-ஆவது திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக ஜேடர்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து வரப்பட்டு கபிலர்குறிச்சி பகுதியில் சுத்திகரிப்பு செய்து நாமக்கல் நகராட்சிப் பகுதியில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கபிலர்குறிச்சிப் பகுதியில் 8 ஏக்கர் நிலம் வாங்கவும் நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய குடிநீர் திட்டம் அமையப் பெற்றாமல், விரிவுபடுத்தப்பட்ட நகராட்சிப் பகுதிக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்தவிதத் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க முடியும் என்கிறார் நகராட்சித் தலைவர் ஆர்.கரிகாலன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

நாமக்கல் நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 1.20 லட்சமாகும். இந்த மக்களுக்கு தலா நாளொன்றுக்கு 35 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு தற்போதுள்ள 3 குடிநீர் திட்டங்களும் போதுமானதாக இல்லாததால் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

விரைவில் புதிய குடிநீர்த் திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு நகர்மன்ற ஒப்புதலுடன் நகராட்சி நிர்வாக இயக்ககத்துக்கு அனுப்பப்படும் என்றார் நகராட்சி பொறியாளர் என்.கமலநாதன்.
Last Updated on Friday, 01 March 2013 09:00
 


Page 87 of 390