Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

நாளைமுதல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Print PDF
தின மணி                   19.02.2013

நாளைமுதல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


மூன்றாவது மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து 20 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் மூன்றாம் மண்டலத்தில் உள்ள 96 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து 44 நாள்கள் மூன்று சுற்றுகளாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல் சுற்றுக்கான தண்ணீர் கடந்த 2012  டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 2013 ஜனவரி 2 ஆம் தேதி வரை திறந்து விடப்பட்டது. இரண்டாவது சுற்றுக்கான தண்ணீர் ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை திறந்து விடப்பட்டது.

மூன்றாவது சுற்றுக்கான தண்ணீர் திறந்துவிடுவது குறித்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பொறியாளர்கள் மற்றும் நீர் பகிர்மானக் குழு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் தலைமையில் உடுமலை சாலையில் உள்ள பிஏபி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் மூன்றாவது மண்டலம் மூன்றாவது சுற்று பாசனத்திற்காக 750 மில்லியன் கனஅடி நீரை வரும் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதிவரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் செல்வராஜ், உடுமலை கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியம், பகிர்மான குழுத் தலைவர்கள் அருண், எஸ்.ஆர்.ராஜகோபால், சாமியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Last Updated on Thursday, 21 February 2013 11:33
 

சீரான குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை

Print PDF
தின மணி          16.02.2013

சீரான குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை

சீரான குடிநீர் விநியோகம் செய்ய உள்ளாட்சி அமைப்புகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

பருவ நிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் பெய்யக் கூடிய மழையின் அளவை விட இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் குறைவான அளவே மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

எனவே, மக்களிடமிருந்து குடிநீர் தொடர்பாக வரக் கூடிய புகார்கள், கோரிக்கைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஊராட்சிப் பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகள், நகராட்சிப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகம் ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அத்தகைய இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க வேண்டும்.

மேலும், ஏற்கனவே உள்ள குடிநீர்க் குழாய்களை சரிசெய்தல், குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டிகளை செம்மைப்படுத்துதல், மின் மோட்டார்களை முறையாகப் பராமரித்தல், குடிநீர்க் குழாய்கள் மற்றும் குடிநீர்ப் பாதைகளை செப்பனிடுதல் போன்ற அனைத்துப் பணிகளையும் அந்தந்தத் துறை அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து இப்பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர்த் தேவையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

குடிநீர் தொடர்பான மக்களின் தேவைகளை, மக்களின் கோரிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும் சிறப்புக் கவனம் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.ராமகிருஷ்ணன், வேளாண் இணை இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு கோட்டாட்சியர் இரா.சுகுமார், ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளர் (பொ) ஆறுமுகம், உதவி இயக்குநர்கள் ரூபன் சங்கர்ராஜ் (ஊராட்சிகள்),  சு.கலைவாணன் (பேரூராட்சிகள்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Monday, 18 February 2013 09:09
 

தேனியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுமா

Print PDF
தின மணி          18.02.2013

தேனியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுமா

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் உள்ள குடிநீர் திட்டம், பழனிசெட்டிபட்டி குடிநீர் திட்டம், வீரப்பஅய்யனார் மலை குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், பழனிசெட்டிபட்டி குடிநீர் திட்டம் மூலம் பம்பிங் செய்யப்படும் நீர் அங்கேயே சுத்திகரிக்கப்பட்டு, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் தேக்கி குடிநீர் குழாய்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. குன்னூர் வைகை ஆறு, வீரப்பஅய்யனார் மலை குடிநீர் திட்டங்களில் இருந்து பம்பிங் செய்யப்படும் தண்ணீர், சுத்திகரிக்கப்படாமல் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் தேக்கி, குளோரினேசன் செய்யப்பட்டு குழாய்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் முறையாக குளோரினேசன் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ரசாயன கலவையை தண்ணீரில் குறிப்பிட்ட அளவில் இட்டு கரையச் செய்யாமல், மூடையை திறந்து அப்படியே மேல்நிலைத் தொட்டிக்குள் கொட்டுவதால், சில நேரங்களில் குழாய்களில் குடிநீர் ரசாயன வாசனையுடன் வருவதாகவும், மேல்நிலைத் தொட்டிக்குள் போடப்படும் சாக்குப் பை, மட்கி தண்ணீருடன் கலந்து வந்து குழாய்களில் சிக்குவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறுகிய தெருக்களில் சாக்கடையோரத்தில் குடிநீர் பகிர்மான குழாகள் பதிக்கப்பட்டுள்ளதால், குடிநீரில் குழாயில் கசிவு ஏற்படும்போது சாக்கடை நீர் கலக்கும் அபாயம் உள்ளது.

பொதுக் குழாய் அவலம்: நகராட்சி எல்லைக்குள் பெரும்பாலான இடங்களில் பொது குடிநீர் குழாய்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக் குடிநீர்  குழாயை சுற்றிலும் தண்ணீர் தேங்காத வகையில் சிமெண்ட் மேடை அமைக்கப்படுவதில்லை. சாக்கடையை ஒட்டியுள்ள பகுதியில் பொது குழாய் அமைக்கப்படுவதால், தண்ணீர் மற்றும் கழிவு நீர் கலந்து பொதுக் குழாய் அமைந்துள்ள பகுதி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு பெண்கள் குழாயில் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில், மூடி வைக்கப்படாமல் உள்ள குடிநீர் வால்வு தொட்டியில் தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் எடுத்துச் சென்று பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் மூலம் பல்வேறு தொற்று நோய் ஏற்படும் நிலையில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் திட்டம் மற்றும் சுகாதார அலுவலர்கள் முன்னிலையில் குடிநீரை முறையாக சுத்திகரித்து விநியோகம் செய்யவும், சாக்கடையை ஒட்டிய பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் பதிப்பதை தவிர்க்கவும், பொது குடிநீர் குழாய்களை பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறியது: வைகை அணை அருகே அமையவுள்ள புதிய குடிநீர் திட்டத்தில் சுத்திரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் முறையாக குளோரினேசன் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேர்வு செய்யப்பட்ட வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொறுத்தி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
Last Updated on Monday, 18 February 2013 09:01
 


Page 93 of 390