தினமணி 20.08.2012
சிவகாசிக்கு குடகநல்லூர் குடிநீர் வழங்க ரூ24 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை
சிவகாசி, ஆக. 19: சிவகாசி நகருக்கு ரூ.24 கோடி மதிப்பில் குடகநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பட்டுள்ளதாக நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது செய்திக் குறிப்பு:
சிவகாசி நகரில் குடிநீர்த் திட்டம்-1964, சிவகாசி நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டம்-1964, மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் 2006-2007 ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.
நகர குடிநீர் அபிவிருத்திக்காக குடகநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற திட்டப் பிரேரணை தயாரிக்குமாறு தனியார் நிறுவனத்திடம் 2009-ம் ஆண்டு நகராட்சி நிóர்வாக ஆணையரகம் தெரிவித்தது. இத்திட்டப் பிரேரணை தயாரிக்கப்பட்டு, இடைக்கால அறிக்கை 2010 ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனவே சிவகாசி நகர் குடிநீர் அபிவிருத்திக்கு குடகநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்குமாறு திட்ட செயலாக்கத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் குடகநல்லூரில் நான்கு கிணறுகள் அமைத்து, அதிலிருந்து தண்ணீர் எடுத்து தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்படும்.
பின்னர் நடுகலூர், சிறுக்கன்குறிச்சி, மாதவகுறிச்சி, அழகியபாண்டியபுரம், வடக்கு செம்பட்டி, கழுகுமலை வழியே வெம்பக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்தடையும். அங்கிருந்து சிவகாசி நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். இதுவே குடகநல்லூர் குடிநீர் திட்டம்.
இதற்காக குழாய் அமைத்து குடிநீர் கொண்டுவர ரூ.24 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.