Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

60 வார்டிலும் ரூ.1.80 கோடியில் ஆழ்குழாய்!

Print PDF

தினமலர்          07.08.2012

60 வார்டிலும் ரூ.1.80 கோடியில் ஆழ்குழாய்!

ஈரோடு: மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, 1.80 கோடி ரூபாய் செலவில், 60 ஆழ்குழாய்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை, 28 வார்டுகளில் போர்வெல் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு காவிரி நீர் வழங்கப்படுகிறது. ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, மாநகராட்சியின், 60 வார்டுகளிலும் உப்பு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வார்டில் எப்போதும் தண்ணீர் சப்ளை இருந்து கொண்டே இருக்கும் வகையில், உப்பு தண்ணீர் தேவையான பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி, மின் மோட்டார் இணைப்பு கொடுக்கப்படுகிறது. வார்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவில், மொத்தம், ஒரு கோடியே, 80 லட்சம் ரூபாய் பொது நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் மண்டலத்தில் காஞ்சிநகர், குறிஞ்சிநகர், காவேரிநகர், செங்குந்தர் புரம், அன்னை சத்யா நகர், பெருமாள் கோவில் ராஜிவ்நகர், ஆர்.என்.,புதூர் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் மண்டலத்தில், 16 லட்சம் ரூபாய் செலவில் ஆறு இடங்களிலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாய் செலவில் எட்டு இடங்களிலும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கங்காபுரம், எல்லப்பாளையம், மாமரத்துப்பாளையம், வீரப்பன்சத்திரம் புறநகர், ஆண்டிக்காடு, பாண்டியன்நகர், கிழக்குகாடு, நந்திநகர், திரு.வி.க.,வீதி உட்பட 14 ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது மண்டலத்தில் விவேகானந்தர் வீதி, வ.உ.சி.,வீதி, அணைக்கட்டு ரோடு, பாண்டியன் வீதி, ராஜாக்காடு, பெரியார்நகர், என்.ஜி.ஜி.ஓ., காலனி ஆகிய பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நான்காவது மண்டலத்தில், சேனாபதிபாளையம், தங்கபெருமாள்வீதி, காமாட்சி காடு, ஆறுமுக வீதி, வெண்டிபாளையம் லட்சுமி நகர், குமரன் நகர் போன்ற பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை, நான்கு மண்டலத்திலும், 28 இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தரைமட்டத்துக்கு மேல் சின்டெக்ஸ் தொட்டி வைத்து, மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு, பொது குழாய் மூலம் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் வகையில் வசதி செய்யப்பட உள்ளது.

துணை மேயர் பழனிசாமி, ""ஒரு மண்டலத்துக்கு, ஏழு போர்வெல் வீதம், நான்கு மண்டலத்திலும், 28 ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்து சீரமைக்கப்படுகிறது,'' என்றார்.

 

"பழனியில் 4 நாள்களில் குடிநீர் விநியோகம் சீராகும்'

Print PDF

தினமணி              06.08.2012

 "பழனியில் 4 நாள்களில் குடிநீர் விநியோகம் சீராகும்'

பழனி, ஆக. 5: பழனி வார்டுகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோக பிரச்னை நான்கு நாள்களில் சீரடையும் என நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, நகர்மன்றத் தலைவர் வேலுமணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி நகருக்கு கோடைகால நீர்த்தேக்கம் மூலம் 5.64 மில்லியன் லிட்டர், பாலாறு நீர்த்தேக்கம் மூலம் 2.43 மில்லியன் லிட்டர் என 8.07 மில்லியன் லிட்டர் குடிநீர் சாதாரண நாள்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து வரும் முக்கியக் குழாய்களில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுள்ள உடைப்புகளால் 4,5,6,7,25 மற்றும் 26}வது வார்டுகளில் குடிநீர் சீராக விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்புகள் துரித வேகத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

நான்கு நாள்களில் இப்பணிகள் நிறைவுபெறும் நிலையில் குடிநீர் விநியோகம் சீராகும். அதுவரை வார்டுகளுக்கு நகராட்சி லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ரூ. 21.60 கோடி மதிப்பில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் குடிநீர் அபிவிருத்திப் பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு முக்கிய குழாய்கள் மாற்றப்பட்டு வருகிறது. இப்பணிக்கு முக்கியத்துவம் தருமாறு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 2012}க்குள் இப்பணிகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

Print PDF

தினகரன்    06.08.2012

மழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

கோவை,:    கோவை  மாவட்டத்தில்  நிலத்தடி   நீர்   மட்டம்   ஒரே   மாதத்தில்   2   மீட்டர் சரிந்தது.பொதுப்பணித்துறையின் நிலநீர் மட்ட   பிரிவு  சார்பில் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்டம் குறித்து  ஆய்வு நடக்கிறது.

மாவட்ட அளவில் 12 ஒன்றியங்களில் 237 கிணறு, ஆழ்குழாய்களில் நீர் மட்ட நிலவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த ஆய்வில் நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மாவட்ட அளவில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த  பிப்ரவரி  மாதம்  கோவை  மாவட்டத்தில்  நிலத்தடி நீர்  மட்டம்  16  மீட்டர்  அளவிற்கு காணப்பட்டது.  மார்ச்  மாதம்  17  முதல்  18  மீட்டர்  வரையிலும்,  ஏப்ரல்  மாதம்  20  மீட்டர் அளவிற்கும்  குறைந்தது.  ஜூன்,  ஜூலை  மாதங்களில்  நிலத்தடி  நீர்  மட்டம்  உயரும்  என எதிர்பார்க்கப்பட்டது.  தென்  மேற்கு  பருவ  மழை பெய்யாததால் கடந்த ஜூனில் நிலத்தடி நீர் மட்டம்    இறுதி  அளவாக  சராசரியாக   20.5 மீட்டர்,  ஜூலையில்  சராசரியாக  22.5  மீட்டர் அளவிற்கு நீர் மட்டம் சென்று விட்டது.

கடந்த  மாதம்  பல்லடம்,  சுல்தான்  பேட்டை,  சூலூர்,  நீலம்பூர்,  அரசூர்,  கணியூர்,   அன்னூர் பகுதியில்  40க்கும்  மேற்பட்ட  கிணறுகளில்  30 மீட்டருக்கும்  கீழ்  நீர்  மட்டம்  தென்பட்டது.

மதுக்கரை, தொண்டாமுத்தூர், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 25 மீட்டர் அளவிற்கு  நீர்  மட்டம்   தென்பட்டது.  35  கிணறு, ஆழ்  குழாய்   கிணறுகளில்   நீர் காணப்படவில்லை.

குளம் சார்ந்த பகுதியில் 15 மீட்டர் ஆழத்தில்நீர் மட்டம் இருப்பது வழக்கம். குறிப்பாக உக்குளம், புதுக்குளம், கொலராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி, வெள்ளலூர், சிங்காநல்லூர் உட்பட 28 குளங்கள் நீறின்றி வறண்டு காணப்படுகிறது.

குளங்களை ஒட்டிய இடங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டமும் பாதாளத்திற்கு சென்று விட்டது.இந்த மாதம் மழை பெய்யாவிட்டால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறைந்து விடும். மாவட்ட அளவில்  100 முதல் 200 அடி ஆழத்தில் ஆழ் குழாய் அமைத்து தண்ணீர் பெறப்படுகிறது.நீர் மட்டம் குறைந்து வருவதால் நிலத்தடி நீர் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளில் வறட்சி நீடிக்கிறது. குடிநீர் விநியோகமும் குறைந்து வருகிறது.

 


Page 110 of 390